வேற மாதிரி மூஞ்சி! ஒட்டன்சத்திரம் அரசு பஸ்ஸில் மாற்றுத்திறனாளியை கதற விட்ட கல்நெஞ்சுக்கார கண்டக்டர்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அரசு பஸ் கண்டக்டர் ஒருவர், மாற்றுத்திறனாளி பயணியை அவமதிக்கும் நோக்கில் அநாகரிகமாக நடந்து கொண்ட சம்பவம் தற்பொழுது வீடியோ ஆதாரத்துடன் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது... மாற்றுத்திறனாளி என்று தெரிந்தும், கண்டக்டர் கடுமையாகவும், மனிதாபிமானம் இல்லாமலும் பேசியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. என்ன நடந்தது?
ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிரில்குமார். மாற்றுத்திறனாளியான இவர், அவசர அலுவல் காரணமாக மதுரைக்கு செல்வதற்காகத் திட்டமிட்டிருந்தார். இதற்காக ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதிக்கு வந்த அவர், அங்கு வந்து நின்ற கோவை - மதுரை தடம் எண் கொண்ட அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

ஒட்டன்சத்திரம் அரசு பேருந்து
பஸ் புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே, கண்டக்டர் நடத்துனர் பிச்சைமணி என்பவர் பயணிகளிடம் டிக்கெட் எடுத்துக்கொண்டு வந்துள்ளார். சிரில்குமாரிடமும் அவர் டிக்கெட் கேட்க, அதற்கு சிரில்குமார் தமக்குரிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார்.. மேலும், அரசு விதிகளின்படி அதற்கான சலுகைக் கட்டணத்தில் டிக்கெட் வழங்குமாறும் கேட்டுள்ளார்.
ஆனால், அந்த அடையாள அட்டையை முறையாக பரிசீலிக்க மறுத்த நடத்துனர் பிச்சைமணி, பயணி சிரில்குமாரை நோக்கிப் பலவாறு தேவையற்ற கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளார். பொது இட என்றும் பாராமல், சக பயணிகளுக்கு முன்னிலையில் கடுமையான வார்த்தைகளால் அவரை விமர்சித்துள்ளார்.
இந்த போட்டோவில் இருப்பது யார்
"இதை வைத்து உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் யூஸ் பண்ணுவீர்கள்?" என்று ஏளனமாகப் பேசியதுடன், "உன் முகத்திற்கும் இந்த போட்டோவிற்கும் சம்பந்தமே இல்லை, போட்டோவில் இருப்பது யார் என்றே கண்டுபிடிக்க முடியாது, போட்டோவில் இருப்பது நீயா, அடையாளமே தெரியலயே" என்றெல்லாம் சொல்லி சலுகைக் கட்டணத்தில் டிக்கெட் தர அடம் பிடித்துள்ளார்.
அத்துடன் நிறுத்தாமல், "வண்டியை விட்டு உடனடியாக கீழே இறங்கு" என்று கண்டக்டர் பிச்சைமணி அதிகாரத் தொனியில் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பயணி சிரில்குமார், "நான் முறையான, ஒரிஜினல் கார்டைத்தான் தருகிறேன். இதில் எந்தத் தவறும் இல்லை. அதனால் நான் வண்டியை விட்டு இறங்க முடியாது. நான் ஒரு மாற்றுத்திறனாளி.. என்னை ஏன் இறங்க சொல்றீங்க? நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், நான் பஸ்ஸில்தான் உட்கார்ந்திருப்பேன்" என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
செல்போனில் வீடியோ பதிவு
இருந்தாலும் கண்டக்டர் தொடர்ந்து டிக்கெட் தராமல் இழுத்தடித்ததோடு, அந்தப் பயணியை மிகவும் அநாகரிகமான முறையில் வசைபாடியுள்ளார்.
கண்டக்டரின் இந்த அத்துமீறலைத் தட்டிக்கேட்டவாறே சிரில்குமார், தனக்கு நேர்ந்த இந்த அநீதியைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார்.. தான் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டரிடம் சொல்லியும்கூட, இப்படியொரு அவமதிப்பு நடந்ததாக சிரில்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளார்.. இந்த வீடியோ காட்சிகள்தான் சோஷியல் மீடியாவில் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பஸ்களில் கட்டண சலுகைகள்
நம்முடைய தமிழக அரசை பொறுத்தவரை, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் பல்வேறு கட்டணச் சலுகைகளையும், முன்னுரிமைகளையும் வழங்கி தொடர்ந்து உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது.
அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், களத்தில் பொதுமக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய அரசு ஊழியரே, மாற்றுத்திறனாளிப் பயணி ஒருவரை இவ்வாறு அநாகரிகமாகவும், மனிதநேயமின்றியும் நடத்தியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் சட்டம் மற்றும் விதிமுறைகளை மதிக்காமல் அநாகரிகமாக நடந்துகொண்ட நடத்துனர் பிச்சைமணி மீது, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாகத் துறை ரீதியான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தற்பொழுது வலுவாக வலியுறுத்தி வருகின்றனர்...!!!












Click it and Unblock the Notifications