டிச.19ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடும் எடப்பாடி பழனிசாமி! அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!
சென்னை: அதிமுக சார்பில் வரும் 19ஆம் தேதி சென்னையில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்படும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த விழா நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது. இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கிறிஸ்தவப் பெருமக்களை கௌரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்கள்.
அந்த வகையில், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் இந்த ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், வருகின்ற 19.12.2022 - திங்கட் கிழமை மாலை 5 மணியளவில், சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவப் பெருமக்களும்; தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications