மாயத்தேவருக்கு மரியாதை! கிளம்பிய சசிகலா.. பயணத்தில் பன்னீர்செல்வம்! ‘அவர்’ வருவாரா என எதிர்பார்ப்பு!
சென்னை : அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக போட்டியிட்டு வென்றவருமான மாயத் தேவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்த சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வருவது உறுதியாகியுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வரமாட்டார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிமுக அதிமுக தலைமை அலுவலகம் இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்பது குறித்து அதிகார மோதல்கள் வலுத்து வருகின்றன.
கட்சி தங்களுக்குத்தான் சொந்தம் என எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வத்தோடு ஏற்கனவே பல ஆண்டுகளாக போராடி வருகிறார் சசிகலா. இதனால் அதிமுக தலைமையை கைப்பற்றுவதில் மும்முனை போட்டி நிலவுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த ஓ பன்னீர்செல்வம் சசிகலாவும் ஒன்றாக கரம் கோர்த்து களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் திரை மறைவில் நடைபெற்று வந்த நிலையில் தான் அந்த செய்தி வெளியானது. அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்து அதனை கட்சியின் நிரந்தர சின்னமாக மாற்றும் வகையில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மாயத் தேவர் காலமானார் என்ற செய்தி நேற்று வெளியானது.

மாயத்தேவர் மரணம்
உடனே அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அவரது உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினர். அதிமுக வரலாற்றில் எப்போதுமே மாயத் தேவருக்கு தனி இடம் உண்டு முதல் மக்களவை உறுப்பினர் மக்கள் பிரதிநிதி என்பதால் தேர்தல்கள் வரும் போதெல்லாம் மாயத்தேவருக்கான மரியாதை அதிகரிக்கும். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக சின்னாளபட்டியில் ஓய்வு எடுத்து வந்த மாயத்தேவர் நேற்று திடீரென காலமானார் என்ற செய்தி அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஓபிஎஸ்- சசிகலா
இந்த நிலையில் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக சின்னாளபட்டியில் உள்ள மாயத் தேவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக சசிகலா சென்னையில் இருந்து மதுரை வந்து அங்கிருந்து கார் மூலம் சின்னாளப்பட்டி வந்து மாயத்தேவரின் உடலுக்கு மரியாதை செலுத்துகிறார். இதே போல ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து திருச்சி வந்து அங்கிருந்து கார் மூலம் சின்னாளபட்டி சென்று மாய தேவரின் உடலுக்கு மரியாதை செலுத்துவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில் அதிமுக சார்பில் பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்பி உதயகுமார் மற்றும் மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி சின்னாளபட்டி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
Recommended Video

தொண்டர்கள் அதிருப்தி
சசிகலா பன்னீர்செல்வம் வருவதால் நிச்சயம் அவரும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாக இருக்கும் இந்த தகவல் ஆனது அதிமுக தொண்டர்களை சற்று அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எந்த நேரமும் அதனை ரத்து செய்துவிட்டு மாயத்தேவரின் உடலுக்கு மரியாதை செலுத்த வருவார் என்றும் கூறுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications