ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி பழனிசாமி.. வட மாவட்டங்களை குறிவைத்து இன்று பிரச்சாரம் ஆரம்பம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை இன்று ஆவடியில் இருந்து அதிரடியாகத் தொடங்கி உள்ளார் . கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாடு, சீட் எண்ணிக்கைகளுக்கு நடுவே எடப்பாடியின் இந்த அதிரடி தொண்டர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடுகளில் தீவிரம் காட்டி வருகின்றன..

இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுவதால், ஒவ்வொரு வாக்குறுதியும் ஒவ்வொரு பிரச்சாரப் பயணமும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது..
எடப்பாடி பழனிசாமி
ஏற்கனவே முதற்கட்டமாக 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மக்களைச் சந்தித்து முடித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தற்போது எஞ்சியுள்ள தொகுதிகளையும், குறிப்பாக வட தமிழகத்தையும் இலக்காகக் கொண்டு தனது பயணத்தைத் திட்டமிட்டுள்ளார்..
"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்தோடு இன்று சனிக்கிழமை பிப்ரவரி 21-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தனது சூறாவளிப் பயணத்தைத் தொடங்கி உள்ளார் ..
இன்றைய தினமே அவர் ஆவடியைத் தொடர்ந்து அம்பத்தூர் தொகுதியிலும் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடையே ஆதரவு திரட்டி கொண்டிருக்கிறார் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிமுகவின் செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்பதே இந்தத் திட்டமிட்ட பயணத்தின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது..
பிளான் B - இன்று முதல்
ஆளுங்கட்சியின் மீதான விமர்சனங்களை முன்வைத்து, அதிமுக ஆட்சிக் காலத்தின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன..
தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 22ம் தேதி மாதவரம் மற்றும் பொன்னேரி தொகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.. சில நாட்கள் இடைவேளைக்குப் பிறகு, வரும் பிப்ரவரி 25-ம் தேதி புதன்கிழமை மதுரவாயல் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளிலும், பிப்ரவரி 26-ம் தேதி வியாழக்கிழமை தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளிலும் தனது பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்..
பிப்ரவரி 21 முதல் 25 வரை திருவள்ளூர் மாவட்டத்திலும், பிப்ரவரி 27-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திலும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், வட மாவட்ட மக்களின் ஆதரவைப் பெறுவதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகிறார்.. இந்த இரண்டாம் கட்டப் பயணத்தின் மூலம் அதிமுக தொண்டர்களிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளதோடு, தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது..
ஆவடி - வட மாவட்டங்கள்
திமுக தரப்பில் மண்டல வாரியாகப் பயிற்சி பாசறைகள் மற்றும் மகளிர் அணி மாநாடுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்குப் போட்டியாக அதிமுக - பாஜக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருகின்றன..
தேமுதிக அணி தாவல், ஓபிஎஸ் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியது போன்ற பரபரப்பான சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பிரச்சாரத் தொடக்கம் மற்ற கட்சிகளையும் விரைந்து செயல்படத் தூண்டியுள்ளது..
வட மாவட்டங்களில் அதிமுகவிற்கு உள்ள பாரம்பரிய வாக்கு வங்கியைக் தக்கவைத்துக் கொள்வதோடு, புதிய வாக்காளர்களைக் கவரும் வகையில் இன்றைய ஆவடி பிரச்சாரம் அமையவுள்ளது.. இன்றைய தொடக்க விழாவுக்காக ஆவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிமுகவினர் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்..
அதிமுக தொண்டர்கள் குஷி
திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டப் பயணங்களை முடித்த பிறகு, அடுத்தகட்டமாக மற்ற மாவட்டங்களுக்கான பயணத் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்பதால், எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார வேகத்தை அதிகரித்துள்ளார்..
இன்று தொடங்கும் இந்தப் பயணம் தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.. மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகளை மையப்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசவுள்ள இந்தப் பேச்சுகள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications