கழகத்தில் கலகக்குரல்.. ஒபிஎஸ்சை ஓரம்கட்ட எடப்பாடி அணி முயற்சியா.. நாளை மறுநாள் அதிமுக அவசர கூட்டம்
Recommended Video
சென்னை: ஒற்றை தலைமை கேட்டு 2 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்திய நிலையில் நாளை மறுநாள் அதிமுக அவசர கூட்டம் நடக்க உள்ளது இதில் அமைச்சர்கள், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளார்கள். இதனிடையே ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று கலகக்குரல் கிளம்பி உள்ளதால் எடப்பாடி அல்லது ஒபிஎஸ் இருவரில் ஒருவர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவை வெளியேற்றக் கோரி தர்ம யுத்தம் தொடங்கினார். அப்போது ஆரம்பித்தது அதிமுகவில் முதல் கலகக் குரல். அதன்பின்னர் ஒபிஎஸ் அணியில் 11 எம்எல்ஏக்கள் உள்பட பலர் இணைந்தனர். இதன்பின்னர் சசிகலா சிறை சென்றால் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கு பதில் முதல்வராக பதவி ஏற்றார்.
ஒபிஎஸ் அணி வெளியேறிய காரணத்தால் அதிமுக கட்சி, மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதை மீட்கும் பொருட்டு, சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து வெளியற்ற தயார் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதன்படி சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டனர். இதன் பின்னர் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வசம் அதிமுக சென்றது.
அதிமுக தலைமை
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஒபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்சும் பொறுப்பேற்றனர். இதன் மூலம் அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. அதிமுகவில் இணைந்த ஒபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. அவரது அணியைச் சேர்ந்த மாபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.மற்றவர்களுக்கு பெரிய அளவில் பொறுப்புகள் கிடைக்கவில்லை. இதனால் ஒபிஎஸ் மற்றும் எடப்பாடி என இரண்டு அணிகளாகவே அதிமுகவினர் செயல்பட ஆரம்பித்தனர்.
ராஜன் செல்லப்பா மீண்டும் சொல்றத பார்த்தா.. அதிமுகவுல எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்காங்க போலயே
அதிமுக தோல்வி
இதனிடையே நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் அதிமுக படுதோல்வி அடைந்தது. லோக்சபா தேர்தல் ஒபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனியில் வெற்றி பெற்றார். மற்றவர்கள் யாரும் வெல்லவில்லை. சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இப்படிப்பட்ட தோல்விக்கு அதிமுகவில் இருக்கும் உள்கட்சி பூசல் தான் காரணம் என தோற்றவர்கள் மனம் புழுங்கினர்.
ராஜன் செல்லப்பா
இதனிடையே மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தன்னுடைய மகன் ராஜ்சத்தியன் மதுரையில் தோற்றுப்போனதால் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்தார். இரட்டை தலைமை இனி வேண்டாம் அதிமுகவில் ஒற்றை தலைமை தான் வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினார். இவருக்க குன்னம் எம்எல்ஏ ராமசந்திரன் ஆதரவு தெரிவித்தார். இதேபோல் பலரும் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
12ம் தேதி அதிமுக கூட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஒபிஎஸ் மற்றும் எடப்பாடி யாரும் பொதுவெளியில் வாயை திறக்கக்கூடாது, எதுவாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசிக்கொள்ளலாம் என கூறிஉள்ளனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 12ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரம் கட்டும் முயற்சிகள்
இந்த கூட்டத்தில் அதிமுகவில் இருக்கும் கலகக்குரல் பெரிய அளவில் வெடிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில் எடப்பாடி அணியினர் ஒபிஎஸ்சை ஓரம்கட்டி, எடப்பாடி பழனிச்சாமியை தலைமை பொறுப்புக்கு கொண்டுவர முயற்சிப்பாக கூறப்படுகிறது. இதேபோல் ஓபிஎஸ் அணியும் தலைமை பொறுப்பை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையில் உள்ளது. இதனால் அதிமுகவில் யார் தலைமை பொறுப்புக்கு வருவார்கள் என்ற பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே கூட்டத்தில் கலக்குரலுக்கு ஆதரவு அதிகரித்தால் எடப்பாடி அல்லது ஒபிஎஸ் இருவரில் ஒருவர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டிய நெருக்கடியும் ஏற்படும் என தெரிகிறது.