முதல்வர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி அம ருவார்.. ஆட்சி மாற்றம் உறுதி.. அண்ணாமலை பேச்சு
சென்னை: வரும் 2026 தேர்தலில் முதல்வர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி அமருவார் என்று தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், மாற்றம் வரட்டும், ஒரு புரட்சி வரட்டும். ஏழை மக்களுக்கு விடிவெள்ளியாக அரசு செயல்படட்டும் என்றும் சென்னையில் மூப்பனார் நினைவு நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி. கே. மூப்பனார். மறைந்த ஜி. கே. மூப்பனாரின் 24ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனாரின் நினைவிடத்தில் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

எடப்பாடி முதல்வர் நாற்காலியில் அமருவார்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூப்பனாரின் நினைவிடத்தில் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, புதிய நீதி கட்சி தலைவர் ஏ. சி. சண்முகம் உள்பட பலரும் கலந்துகொண்டு மூப்பனாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது பேசிய முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், மாற்றம் வரட்டும், ஒரு புரட்சி வரட்டும். ஏழை மக்களுக்கு விடிவெள்ளியாக அரசு செயல்படட்டும் என்று பேசினார். அண்ணாமலை கூறியதாவது:-
ஆட்சி மாற்றம் வரட்டும்
அகில இந்திய தலைவராக விளங்கியவர் மூப்பனார். ஒரு தமிழன் எல்லோரையும் ஒருங்கிணைத்து அகில இந்திய தலைவராக விளங்கினார். ஒரு தமிழன் நாட்டின் (மூப்பனார்) பிரதமராக ஆவதற்கு மிக அருகில் சென்று தடுக்கப்பட்டவர். ஆனால் நான் அந்த அரசியலை பேச விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசி சென்று இருக்கிறார்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் நாற்காலியில் எடப்பாடி பழனிசாமி அமருவார் என்று இங்கே பேசியவர்கள் எல்லாரும் சொன்னார்கள். அதன்படி மாற்றம் வரட்டும்.. ஒரு புரட்சி வரட்டும்.. ஏழை மக்களுக்காக விடிவெள்ளியாக அரசு செயல்படட்டும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என டீக்கடை வரை மக்கள் பேசி வருகிறார்கள். மூப்பனாரின் ஆசி 2026 தேர்தலில் நமக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நிர்மலா சீதாராமன் பேச்சு
முன்னதாக நிர்மலா சீதாராமன் பேசுகையில், "மூப்பனாருக்கு எல்லா மாநிலத்திலும், மதிப்பும், மரியாதையும் இருந்தது. காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில், தனி ஆளுமையுடன் அவர் திகழ்ந்தார். மேலும் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு கடந்த 1996ஆம் ஆண்டு வந்தது.
ஆனால் அவர் பிரதமர் ஆகவில்லை. அவரை பிரதமர் ஆக விடாமல் தடுத்தது யார் என்று நம் எல்லாருக்கும் தெரிந்ததே தான். இன்றைக்கு தமிழ்.. தமிழ்.. தமிழ்நாடு.. என்று திருப்பி திருப்பி பேசி வருகிறவர்கள் தான், ஒரு தமிழன் (மூப்பனார்) பிரதமராகும் நேரத்தில், அவருக்கு ஆதரவு அளிக்காமல் தடுத்து விட்டார்கள்.. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழனுக்கு செய்த மிகப் பெரிய துரோகம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications