5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம்.. மத்திய அரசின் அறிவிப்புக்கு வைரமுத்து வரவேற்பு
சென்னை: புதிய கல்வி கொள்கையின் படி 5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அளித்த புதிய கல்வி கொள்கை பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் படி, 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும். பள்ளிக்கு வராமல் இருக்கும் 2 கோடி குழந்தைகள் 2020-ம் ஆண்டுக்குள் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.
12-ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி வழங்கப்படும். 6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும். 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும்.
12 ஆண்டுகள் கொண்ட பள்ளிக்கல்வி 5 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 4 ஆண்டுகள் என வகைப்படுத்தப்பட்டு பாட திட்டம் வகுக்கப்படும். இதுதவிர 3 ஆண்டுகள் மழலையர் பள்ளி வகுப்பும் உண்டு. இப்படியாக அறிவிப்பில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன.
ஏழைகளுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் புதிய கல்வி கொள்கை- கனிமொழி
இந்நிலையில் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்படும். என்ற அறிவிப்புக்கு கவிஞர் வைரமுத்து வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்று நடுவண் அரசு பொதுவாக வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம் என்ற உறுதிச் சொற்களால் உரைக்கப்பட வேண்டுமென்று கல்வி உலகம் கருதுகிறது." என்று கூறியுள்ளார்.