#Resign_AnbilMahesh ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்.. நெருக்கடியில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை: சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தன்னம்பிக்கை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில், ஆன்மிக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ட்விட்டரில் பலரும் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகிறார்கள். அதேநேரம் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எதிராக #Resign_AnbilMahesh ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், பகுத்தறிவுக்கும் அறிவியலுக்கும் புறம்பாகப் பேசியதாக கூறப்படுகிறது. மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்று அந்த பேச்சாளர் பேசியிருந்தாராம்.

இதேபோல் அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்மீகத்திற்கு இடமில்லை என்று கேள்வி எழுப்பிய ஆசிரியருக்கு ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு அளித்த பதிலில் "ஆன்மீகம், மறுபிறவி, பாவ-புண்ணியம்" ஆகியவை பற்றி பேசினார். அதேபோல் அரசு பள்ளிக்கூடங்களில் ஆன்மீகம் பேசக்கூடாது என்று எந்த சட்டம் கூறுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், பலரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் இதேபோன்று யாரையாவது ஒருவரை அழைத்து வந்து கல்வியில் அன்பில் மகேஷ் ஆன்மீகத்தை புகுத்துவதாக திமுகவினரே சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்
கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து திமுகவினர் காலையில் இருந்து ட்விட்டரில் தொடர்ந்து ஹேஷ்டேக் போட்டு விமர்சித்து வருகிறார்கள். ட்விட்டரில் #Resign_AnbilMahesh என்ற ஹேஷ்டேக் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. திமுகவினரே இணையதளங்களில் அமைச்சரை விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்த அறிந்த முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன். அறிவியலே முன்னேற்றத்துக்கான வழி" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறும் போது, சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில், இனி இது போன்று நடைபெறாத விதம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications