கை அகற்றப்பட்ட ராமநாதபுரம் குழந்தை இறப்பு ஏன்? உடல் முழுவதும் பரவிய தொற்று.. மருத்துவர்கள் விளக்கம்
சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கையை இழந்த ஒன்றரை வயது குழந்தை பலியானது குறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர்- அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை முகமது மகிர். இந்த குழந்தை பிறக்கும் போது ஒன்றரை கிலோ எடையுடன் இருந்தது. இதனால் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

அந்த குழந்தைக்கு நரம்பியல் பிரச்சினை இருந்தது. மேலும் குழந்தையின் மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம் தேங்கியிருந்தது. அந்த திரவத்தை கடந்த ஜூன் மாதம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர்.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய குழந்தைக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஜூன் 25 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது. அப்போது குழந்தையின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர்.
இதற்காக இரு கைகளிலும் டிரிப்ஸ் போடப்பட்டது. அப்போது குழந்தையின் கையின் நிறம் திடீரென மாற தொடங்கியது. இதனால் அதிர்ந்த தாய் அஜிஸா, செவிலியர்களிடம் கூறிய போது அது ஒன்றும் பிரச்சினை இல்லை என கூறிவிட்டடனராம். சிறிது நேரத்திற்கெல்லாம் குழந்தையின் கை முழுவதும் நிறம் மாறியது. இதனால் நரம்பியல் துறையில் குழந்தையை பரிசோதித்த போது அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த குழந்தைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்டது. பின்னர் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழந்தையின் இந்த நிலைக்கு மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியப்போக்கே காரணம் என்றும் எப்போதும் என் குழந்தையை குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்றே மருத்துவர்கள் கிண்டலாக தெரிவித்தனர் என்றும் குழந்தை குறித்து முறையான எந்த தகவலையும் மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை என்றும் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கை அகற்றப்பட்டாலும் குழந்தையை எப்படியும் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்த பெற்றோருக்கு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. குழந்தை இறப்பு குறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது மகிர் எனும் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததற்கு பாக்டீரியா தொற்றால் ரத்தத்தில் நச்சுகள் கலந்து குழந்தைக்கு உயிரிழப்பை ஏற்படுத்தியது. குழந்தைக்கு உயர் தர சிகிச்சைகள் அளித்தும் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications