ஈரோடு தம்பதி கொலை.. வெட்கமாக இல்லையா? இது தான் உங்க சட்டம் ஒழுங்கா ஸ்டாலின்! டேட்டாவோடு எடப்பாடி!
சென்னை: ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்டு நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என மு.க.ஸ்டாலின் பெருமை பேசிய நிலையில், இந்த கொலை சம்பவத்திற்கு என்ன பதில் என கேள்வி எழுப்பி இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளங்காட்டு வலசு பகுதியில் மேக்கரயான் தோட்டத்தில் ராமசாமி என்ற விவசாயியும் அவரது மனைவி பாக்கியமாளும் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது மகன் வெளியூரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவரது மகன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து ராமசாமியின் மகன் அருகில் இருந்தவரை அழைத்து தனது பெற்றோரை பார்க்கும்படி கூறியுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும் பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பாக்கியம்மாள் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மாயமானதாக கூறப்படுகிறது. வீட்டில் இருக்கும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்பதி கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என கூறும் திமுக அரசுக்கு வெட்கம் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய முக ஸ்டாலின் அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்: 1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை. 9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை. 29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.
13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை. 14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை. இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்" என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இந்த கொலை- கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications