வேலூர் தேர்தல் ரத்து.. டாப் டூ தலைவர் துரைமுருகனுக்கு வைத்த குறி.. திமுகவுக்கு விடப்பட்ட சவாலா?
வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் காழ்ப்புணர்ச்சி என கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: திமுகவின் நம்பர் டூ தலைவரான துரைமுருகனின் மகன் போட்டியிடும் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்திருப்பது திமுகவுக்கு விடப்பட்ட நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது.
வேலூர் தொகுதியில் அளவுக்கு அதிகமான பணம் புழங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதி வேலூர். திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இங்கு களம் இறக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டதில் இருந்தே கட்சிக்குள் சர்ச்சைதான். இதையும் சமாளித்தே தன் மகனுக்காக வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார் துரைமுருகன்.
இந்த நிலையில்தான் போன மாதம் 29, 30 தேதிகளில் அவரது வீட்டில் ரெயிடு நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதை தவிர கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான நிறுவனங்கள், திமுக வேட்பாளர் உறவினர் வீடு என பல இடங்களில் சோதனை வேட்டை நடந்தன. குறிப்பாக பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.
மாறி மாறி கருத்துக்கள்
மற்றொரு பக்கம் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்தது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே இந்த ரெய்டு நடத்தப்பட்ட அன்றே வேலூரில் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழ ஆரம்பித்து விட்டது. ரத்து ஆகாது என்று ஒரு தரப்பும், ரத்து ஆகும் என்று ஒரு தரப்பும் மாறி மாறி கருத்துக்களை முன் வைத்தபடியே இருந்தன.
வலுவான ஆதாரங்கள்
ஆனால் இப்போது இறுதியாக குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று தேர்தலை அங்கு ரத்தே செய்வதாக ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு ரெய்டு நடந்தபோது கிடைத்த வலுவான ஆதாரங்களே முக்கிய காரணியாக உள்ளன. இதையடுத்து வேலூர் மக்களவை தொகுதிக்குள் எந்த பணமும் கைப்பற்றப்படவில்லை என்று துரைமுருகன் சொல்கிறார்.
முதல் காரணம்
இது கண்டிப்பாக திமுகவுக்கு பெரிய அடிதான்.. முதலாவதாக, திமுகவின் மூத்த தலைவர், கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் ஒட்டுமொத்த அரசியல் வளர்ச்சியையே அசைத்து பார்க்கும்படி இந்த அறிவிப்பு உள்ளது.
மைனஸ்
இரண்டாவது, திமுகவுக்கு இதன்மூலம் பெரிய சரிவுதான். அரசியல் பலம், பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆயிரம் காரணங்களை அதிமுக, பாஜக மீது திணித்தாலும் தனிப்பட்ட முறையில் திமுகவுக்கு ஒருவித மைனஸாகவே இது பார்க்கப்படுகிறது.
யார் தவறு?
மூன்றாவதாக, பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தாமல் தேர்தலை நிறுத்துவது என்பது தமிழகத்தில் சென்ற முறையிலிருந்துதான் ஆரம்பித்து இருக்கிறார்கள். பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியது யார் குற்றம்? என்பது இங்கு கேள்வியாக எழுகிறது.
ஏசி சண்முகம்
நான்காவதாக, வேலூரை போலவே எல்லா தொகுதியிலும் இப்படி ஒரு சோதனை தீவிரமாக நடத்தப்பட்டிருந்தால், கோடிக்கணக்கான பணம் நிச்சயம் பிடிபட்டிருக்கும். அப்படியானால் எல்லா தொகுதியிலும் மறு தேர்தல் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். அதனால் அதிமுக, பாஜகவும்கூட பாதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஒரு நிலைமை தமிழகத்தில் ஏற்படவே இல்லை. அதனால்தான், இதே வேலூரில் போட்டியிடும் ஏசி சண்முகத்திடம் இல்லாத பணமா என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர்.
என்ன நடவடிக்கை?
ஐந்தாவதாக, 2 வருஷத்துக்கு முன்னாடி ஆர்கே நகரில் இப்படித்தான் பணப்புழக்கம் ஏற்பட்டதாக ஒரு புகார் எழுந்தது. அந்த புகார் அமைச்சர் மீதே எழுந்தது. அமைச்சருடன் சேர்ந்து ஒரு பெயர் பட்டியலும் வெளியானது. இதையடுத்து அங்கு தேர்தல் ரத்தானது.. ஆனால் மறுபடியும் தேர்தல் நடந்தது. ஆனால் எந்த காரணத்துக்காக தேர்தல் ரத்தானதாக தேர்தல் ஆணையம் அன்று அறிவித்ததோ, அவர்கள் மீது இதுவரை ஒரு சட்ட நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. இதேதான் அரவக்குறிச்சி, தஞ்சாவூரிலும் நடந்தது. இந்நிலையில் வேலூரில் தேர்தலை நிறுத்தி இருப்பது அரசியல் ட்விஸ்ட் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
தள்ளி வைத்துள்ளது
ஆறாவதாக, வேலூர் தொகுதி நேற்று நிலவரம் குறித்து நேற்று காலைதான் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை போயிருக்கிறது. அதன் பின்னர் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ள தேர்தல் ஆணையம் தேர்தலை படு வேகமாக தள்ளி வைத்துள்ளது. தேர்தல் ஆணையம் இதேபோல பல்வேறு சம்பவங்களிலும் மின்னல் வேகத்தை காட்டுவதில்லை என்பதே அரசியல் கட்சிகளின் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. அதையும் சரி செய்ய தேர்தல் ஆணையம் முன்வருமா?