நெருங்கிய “கிளைமேக்ஸ்”.. இரட்டை இலை எடப்பாடிக்கே! பன்னீருக்கு அடி - உசேனுக்கு தேர்தல் ஆணையம் “டிக்”
எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து இருக்கிறது.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தொடர்பாக கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் அளித்த கடிதத்தை ஏற்பதாக அறிவித்த தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து இருக்கிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தது.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அதிமுக வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

அதிமுக வேட்பாளர் யார்?
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசுவை ஈரோடு கிழக்கு வேட்பாளராக அறிவித்து உள்ளார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ் மகன் உசேன் கடிதம்
இது தொடர்பான ஆவணங்களை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பிய கடிதத்தில் தென்னரசுவை அதிமுக வேட்பாளராக முன்மொழிந்துள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பு
இதில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த வேட்பாளர் செந்தில் முருகன் பெயர் இல்லாததற்கு அவரது அணியினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை எதிர்த்து அவர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் தென்னரசுவை வேட்பாளராக ஏற்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கிய கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்தார் தமிழ் மகன் உசேன்.

வாபஸ் பெற்ற ஓபிஎஸ்
இந்த நிலையில் தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெறுவதாகவும், இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். இதற்கிடையே தமிழ் மகன் உசேனை அதிமுக அவைத் தலைவராக அங்கீகரித்து ஈரோடு கிழக்கு தேர்தல் அலுவலருக்கு கடிதம் எழுதி இருக்கிறது தேர்தல் ஆணையம்.

எடப்பாடிக்கு இரட்டை இலை
குறுகிய காலத்திற்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்து இருக்கும் தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடவும் அவருக்கு அங்கீகாரம் கொடுத்து இருக்கிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications