விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு... பானை சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து ஆறு இடங்களில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குப் பானை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திமுக மெகா கூட்டணியை அமைத்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்திலேயே திமுக இடங்களை ஒதுக்கியிருந்தது. அதன்படி விசிகவுக்கு இந்தத் தேர்தலில் ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டது. திமுக சின்னத்தில் போட்டியிடாமல் இந்த முறை சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விசிகவுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அதேநேரம் தொல் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலிலும் விசிகவுக்கு பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குப் பானை சின்னத்தை தற்போது தேர்தல் ஆணையம் ஒதுக்கியதுள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தனித் தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் என மொத்தம் ஆறு தொகுதிகளில் களமிறங்குகிறது. விசிக போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
நாகப்பட்டினம்- ஆளூர் ஷாநவாஸ்
திருப்போரூர்- எஸ்.எஸ்.பாலாஜி
வானூர் (தனி) - வன்னி அரசு
அரக்கோணம் (தனி)- கவுதம சன்னா
காட்டுமன்னார்கோயில் (தனி)- சிந்தனைச் செல்வன்
செய்யூர் (தனி) - பனையூர் பாபு