லோக்சபா தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.. தபால் வாக்கு தொடர்பாக முக்கிய அறிவுரை
சென்னை: லோக்சபா தேர்தல் தேதி இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்களின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதனால் 4 மாநிலங்களுக்கும் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
இன்றைய தினம் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை இந்த நடத்தை விதிகள் அமலில் இருக்கும். அதிகபட்சமாக 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரே கட்டமாக 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மாறாக வடமாநிலங்களில் தான் பல கட்டங்களாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தகைய சூழலில் தான் லோக்சபா தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் தபால் வாக்கு சீட்டு தயாரிப்பு, கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தபால் வாக்கு சீட்டுகள் தயார் செய்யும் பணியை கண்காணிக்க ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனே தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும். தபால் வாக்கு சீட்டுகள் அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள அரசு அச்சகங்களுக்கு தான் முன்னரிமை வழங்க வேண்டும். இந்த மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
தபால் வாக்கு சீட்டு அச்சடிப்பதை கண்காணிக்க கட்சி வாரியாக ஏஜென்டுகளை நியமனம் செய்யலாம். தபால் சீட்டில் வேட்பாளரின் பெயர், சின்னம் வரிசை எண் உள்ளிட்டவற்றை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். மேலும் ஒரு பண்டலுக்கு 50 வாக்கு சீட்டுகள் என்ற அடிப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களிட வேண்டும். அதன்பிறகு அச்சக பொறுப்பாளர் தபால் வாக்கு சீட்டுகளை உதவி தேர்தல் அதிகாரியிடம் போலீஸ் பாதுகாப்புடன் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் நடக்கும் வரை அந்த தபால் வாக்கு சீட்டுகள் இரும்பு பெட்டியில் தனி அறையில் வைக்கப்பட வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications