Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாறி மாறி சிக்னல்.. 1 நாள் நிம்மதியா இருக்க முடியுதா.. எடப்பாடி- ஓபிஎஸ்ஸை குழப்பிய டெல்லி! பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை.. இது 2014 லோக்சபா தேர்தலில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற பின் 2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஜெயலலிதா சொன்னது. இந்தியாவே மோடியை பிரம்மாண்டமாக பார்த்துக் கொண்டு இருந்த போது மோடியா.. லேடியா என்று ஜெயலலிதா சவால் விட்ட காலம் அது. அதே அதிமுக.. டெல்லிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அதே அதிமுக தற்போது டெல்லியிடம் சுருண்டு விழுந்துள்ளது. அதிமுகவில் டெல்லி ஆடும் மியூஸிக்கல் சேர் காரணமாக கட்சியின் டாப் தலைகள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை குழம்பிப்போய் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா இருந்த காலத்தில் அதிமுகவில் யார் எப்போது அமைச்சர் என்பதில் பெரிய குழப்பம் இருக்கும். நேற்று ஒருவர் அமைச்சராக இருந்தால் இன்று காலை அவரின் பதவி காலியாக இருக்கும். இப்போது ஜெயலலிதா இல்லாத காலத்தில் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பதே யார் என்று தெரியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அப்போது அமைச்சர் பதவிக்கு நேர்ந்த கதி.. இப்போது தலைமை பதவிக்கே நேர்ந்து உள்ளது. அப்போது ஜெயலலிதாவிடம் இருந்த அதிமுக லகான்.. இப்போது டெல்லியின் கைகளில் உள்ளது.

நேற்று எடப்பாடிதான் பொதுச்செயலாளர் என்று ஒரு லெட்டர் வந்தால் மறுநாளே ஓபிஎஸ்தான் ஒருங்கிணைப்பாளர் என்று வேறு ஒரு லெட்டர் வருகிறது. அதிமுகவில் நடக்கும் இந்த மியூஸிக்கல் சேர் சுற்று.. பெரும் அவல நகைச்சுவையாக மாறி உள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் அதிமுக ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துவிட்டன.. அவை என்னென்ன என்று வரிசையாக பார்க்கலாம்..

எடப்பாடி - மோடி அழைப்பு

எடப்பாடி - மோடி அழைப்பு

ஜி 20 கூட்டம் தொடர்பான ஆலோசனையில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்றார். 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் பிரம்மாண்ட உச்சி மாநாடும் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் இதை பற்றி ஆலோசனை செய்ய பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கீழ், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறப்பட்டு இருந்தது. இது எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அங்கீகரிப்பது போல இருந்தது. எடப்பாடியின் ஆதரவாளர்களும்.. ஹே பாருங்க எடப்பாடியை பொதுச்செயலாளர் என்று ஒப்புக்கொண்டுவிட்டார்கள்.. மோடிக்கு தெரியாமல் இந்த கடிதம் வந்து இருக்காது.. எடப்பாடி வின் பண்ணிட்டார்.. அதாம்லே வர்கீஸு! என்று எடப்பாடியின் ஆதரவாளர்கள் குஷியில் திளைத்தனர்.

சந்தோசம்

சந்தோசம்

எடப்பாடிக்கு இரட்டை சந்தோசம் கொடுக்கும் செய்தி அடுத்த சில நாட்களிலேயே வந்தது. எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எடப்பாடி தரப்பினர் கொண்டாடி வருகிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் என்று கையெழுத்துப் போட்டு தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை அக்டோபர் 3-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் கொடுத்த ஒப்புகையை (அக்கனாலெட்ஜ்மெண்ட்) தேர்தல் ஆணையம் தங்கள் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அனுப்பாத நிலையில் எடப்பாடி, இடைக்கால பொதுச்செயலாளர் என்று கையெழுத்துப் போட்டு தாக்கல் செய்த வரவு செலவு கணக்கை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்பட்டது. இதுவும் கிட்டத்தட்ட தேர்தல் ஆணையம் எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதோ என்ற பார்க்கப்பட்டது.

ஓபிஎஸ் ஹாப்பி

ஓபிஎஸ் ஹாப்பி

அதன்பின் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ய மத்திய சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இதிலும் எடப்பாடிக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த அழைப்பு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு சென்றுள்ளது. அந்த வகையில் அதிமுகவிற்கும் அழைப்பு சென்றுள்ளது. இதில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் அழைப்பு சென்றுள்ளது. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு செல்லாத நிலையில் எடப்பாடிக்கு மட்டும் அழைப்பு சென்றுள்ளது. இதனால் எங்கே தேர்தல் ஆணையம் எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரித்துவிட்டதோ என்ற கேள்வி உறுதியாக எழுந்தது.

ட்விஸ்ட்

ட்விஸ்ட்

இப்படி எல்லாம் எடப்பாடி பக்கம் சென்று கொண்டு இருக்க.. இருங்க பாஸ் இப்போதான் ட்விஸ்டே இருக்கு என்று சொல்வது போல தேர்தல் ஆணையம் வேறு ஒரு கடிதத்தை அனுப்பியது. அதன்படி புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்யும் ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்து விளக்கம் கேட்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. ஜனவரி 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதை பார்த்து எடப்பாடி தரப்பு ஏகத்திற்கும் டென்சன் ஆகியுள்ளது. எடப்பாடிதான் இடைக்கால பொதுச்செயலாளர்.. டெல்லியே ஏற்றுக்கொண்டுவிட்டது என்று ஜாலியாக இருந்த எடப்பாடியின் ஆதரவாளர்கள்.. வட்ட செயலாளர் வண்ண்ண்ண்ன்டு முரு... என்று ஸ்ருதியை குறைத்து பாடும் நிலை ஏற்பட்டது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

இந்த கடிதத்தை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பதிலும் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் இந்த தகவல்தான் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு கடிதத்தை மீண்டும் எடப்பாடிக்கே அனுப்பி உள்ளார். இதை மீண்டும் எடப்பாடி திருப்பி அனுப்பிய நிலையில்.. ஓபிஎஸ் மட்டும் இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் கலந்து கொள்வதாக முடிவாகி இருக்கிறது. இப்படி மாறி மாறி செல்லும் கடிதங்களால் அதிமுக தொண்டர்கள்தான் குழப்பத்தின் உச்சிக்கு போய் உள்ளனர். பொங்கலுக்கு துணிவா வாரிசா என்பதை விட.. அதிமுகவில் எடப்படியா? ஓபிஎஸ்ஸா? என்ற கேள்விதான் பெரிதாக உள்ளது.

குழப்பம்

குழப்பம்

கிட்டத்தட்ட அதிமுகவை வைத்து தற்போது டெல்லி பெரிய புட் பால் கேமே ஆடி விட்டது. இந்த பக்கம் கோல் போஸ்டிலும்.. அந்த பக்கம் உள்ள கோல் போஸ்டிலும்மாறி மாறி கோல் போட்டு.. அதிமுக தொண்டர்களை டெல்லி ஏகத்திற்கும் குழப்பி உள்ளது. எந்த அடிமட்ட தொண்டனாக இருந்தாலும்.. இப்போ எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளரா அல்லது இணை ஒருங்கிணைப்பாளரா? என்றுதான் கேட்பார். அதேபோல் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரா அல்லது ஓரம்கட்டப்பட்டவரா என்றுதான் கேட்பார். ஆனால் அதற்கான தெளிவான பதில்தான் இன்னும் கிடைக்கவில்லை. முட்டையில் இருந்து கோழி வந்ததா.. கோழியில் இருந்து முட்டை வந்ததா என்ற பன்னெடுங்கால புதிருக்கு பின் விடை கிடைக்காத இன்னொரு புதிர் என்றால்.. அது அதிமுகவின் தலைமை யார் என்பதுதான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+