Election Exclusive: ஓவர் லோடு.. கூட்டணிக்கு வந்த தேமுதிகவால் திமுகவுக்கு சிக்கல்! முரண்டு பிடிக்கும் ஓல்ட் ஸ்டூடண்ட்ஸ்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு யாருமே எதிர்பாராத வகையில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் இணைந்து இருக்கிறது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம். அக்கட்சிக்கு ஏழு தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் வழங்க திமுக முன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளை தாண்டாத விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டு நெருக்கடி கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது. குறிப்பாக மாநிலங்களவை சீட்டை கேட்கும் மனநிலையில் மதிமுக இருப்பதாக சொல்லப்படுகிறது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் 2026 சட்டமன்ற தேர்தல் சென்று கொண்டிருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது தேமுதிக. கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன் முறையாக இந்த கூட்டணி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிட்ட நிலையில் பிரேமலதா விஜயகாந்த்-ன் மகன் விஜய பிரபாகரன் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விருதுநகரில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்.

தேமுதிக திமுக கூட்டணி
இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்ற கோரிக்கையுடன் திமுக தரப்பை தேமுதிக அணுகிய நிலையில் அதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார். திமுக கூட்டணியில் தேமுதிகக்கு 7 தொகுதிகளுடன் மாநிலங்களவை இடமும் வழங்கப்படலாம் என்ற அரசியல் வட்டார தகவல்களும் வெளியாகியுள்ளன.
பிரேமலதா விஜயகாந்த் முடிவு
இந்த நிலையில் தேமுதிக கூட்டணிக்குள் வந்திருப்பதால் ஓவர் லோடு மனநிலையில் இருக்கிறது அறிவாலயம். கூட்டணி பங்கீட்டின்போது தங்களுக்கானதை குறைத்துக் கொள்ள வேண்டும் என கூட்டணி கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கலாம் என சொல்லப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், காங்கிரசுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதேபோல விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
தொகுதி ஒதுக்கீடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர். இந்த நிலையில் தற்போது கூட்டணிக்கு கூடுதலாக மக்கள் நீதி மய்யம், தேமுதிக வந்திருக்கிறது. இதனால் அந்த தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்வதற்காக தனது தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
வைகோ அதிருப்தி
அதே நேரத்தில் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு வெறும் ஆறு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு நேற்று வந்த தேமுதிகவுக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்குவதா? என விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வைகோவுக்கு தரப்பட்ட நிலையில் இந்த முறை தரப்படவில்லை. ராஜ்யசபா சீட்டு தராத நிலையில் மதிமுக அதிக சீட் கேட்டு நெருக்கடி தரும் என சொல்லப்படுகிறது. தேமுதிக கூட்டணிக்கு வந்திருப்பது நன்மைதான் என்றாலும், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை காரணமாக திமுகவுக்கு நெருக்கடி ஏற்படுவது உறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இரட்டை இலை
இதைவிட இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அவை அந்த கட்சிகள் தங்களது சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என அடம் பிடிப்பது. இரட்டை இலை Vs உதயசூரியன் என வந்தால் உதயசூரியன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் அங்கீகாரம் பெற்ற கட்சியான விடுதலை சிறுத்தைகள் பானை சின்னத்திலும், தேமுதிக முரசு சின்னத்திலும், மதிமுக பம்பரம் சின்னத்திலும், பிற கட்சிகள் தங்களது சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனக் கூறி வருகின்றன. இதுவும் ஒரு வகையில் திமுகவுக்கு சிக்கல்தான். இரட்டை இலை Vs பானை, இரட்டை இலை Vs முரசு இரட்டை இலைVs பம்பரம் என வரும்போது இரட்டை இலைக்குத்தான் வாக்குகள் செல்லும் சூழல் உள்ளது. இதுவும் திமுகவுக்கு நெருக்கடியை தரும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications