Election Exclusive: அய்யா வேலைக்காக மாட்டார்..அதிமுக தாவும் அருள்? தலைமைச் செயலகத்தில் பரபரத்த மீட்டிங்.. ஜிகே மணி ஷாக்!
சென்னை: பாமக ராமதாஸ் திறப்பு மிகுந்த அதிருப்தியில் இருக்கிறது. திமுகவும் அதிமுகவும் ராமதாஸை கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்ட நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருக்கிறார் பாமக ராமதாஸ் தரப்பு எம்எல்ஏவான அருள். எடப்பாடி மட்டுமல்லாதும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரையும் அவர் சந்தித்து பேசிய நிலையில் அதிமுகவுக்கு தாவும் முடிவுக்கு வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது
தமிழகத்தில் தேர்தல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணிகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதிமுக கூட்டணி அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், மேலும் சில கட்சிகளை இணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் தங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காததால், அவர்களின் முடிவு குறித்து அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழக அரசியல்
பாமக கட்சியில் கடந்த சில மாதங்களாக உள்ள கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக பேசப்பட்டு வருகின்றன. ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையிலான கருத்து மோதல் பொதுமேடைகளிலும் வெளிப்பட்டது. இதையடுத்து கட்சியின் தலைமையைச் சுற்றி குழப்ப நிலை உருவானது. அன்புமணி தன்னை நீக்க முடியாது என்று தெரிவித்த நிலையில், கட்சியில் இரண்டு தரப்புகள் உருவானது. அன்புமணி ஆதரவாளர்கள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளார். தேர்தல் ஆணையமும் அவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விசிக போர்க்கொடி
ஆனால் ராமதாஸ் தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்காமல் இருந்து வந்தார். ஆனால், திமுக கூட்டணியில் இணைவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக ராமதாஸ் தரப்பு இரட்டை இலக்க தொகுதிகளை கோரியதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் கேட்ட அளவிலான தொகுதிகளை வழங்க முடியாது என்ற நிலைப்பாட்டை திமுக எடுத்தது. மேலும், பாமக இடம்பெறும் கூட்டணியில் இணைவது தங்களது கொள்கைக்கு எதிரானது என விசிக போர்க்கொடி தூக்கியது.
ராமதாஸ்
இதனால் இதனால் மாற்று அரசியல் வாய்ப்புகள் குறித்தும் ராமதாஸ் தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தனித்து போட்டியிடும் வாய்ப்பும் பரிசீலனையில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அய்யா பாமக என்ற பெயரில் ராமதாஸின் ஆதரவாளர்கள் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் அதில் இணைந்து ராமதாஸ் பயணிப்பார் எனவும். வடமாவட்டங்களில் பாமக வலுவாக இருக்கும் 25 தொகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போட்டியிடுவார்கள் என்ற தகவலும் உலாவுகிறது.
ஜி.கே. மணி
இந்த நிலையில் ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த எம்எல்ஏவான அருள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று தமிழக சட்டமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருக்கிறார் அருள். ஆனால் இந்த தகவல் ஜி.கே. மணிக்கு தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் அல்லாமல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரையும் அருள் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
பாமக அருள் அதிமுக
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இணைந்திருக்கும் நிலையில் ராமதாஸ் தரப்பும் அதே கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. திமுகவில் இணையும் வாய்ப்பும் ராமராஸுக்கு இன்னும் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து ராமதாஸ் தரப்பில் பிரச்சனைகள் எழுவதால் அதிமுகவில் இணைந்து விடும் முடிவுக்கு அருள் வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அருள் பாமகவில் இணைய மாட்டார் எனவும், கூட்டணி தொடர்பாகவே அவர் பேசியதாக தகவல்கள் சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications