களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் அனைத்து முன்னணி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார ஸ்டைல், அக்கட்சியின் தொண்டர்களுக்கே அதிருப்தி கொடுப்பதாக அமைந்துள்ளது.
சென்னை பெரம்பூரில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், பின்னர், பெரம்பூரிலும் கொளத்தூரிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது விஜய்யை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பெரம்பூரில் இருந்து அவர் கொளத்தூர் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆனது.

பாதியில் நிறுத்திய விஜய்
முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் கூட்டம் அதிகமாகக் கூடியதால் வில்லிவாக்கம் தொகுதியில் செய்ய இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார் விஜய். போலீசார் போதிய பாதுகாப்பு தராததால் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக தெரிவித்தார் விஜய். இதையடுத்து போலீசார் போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து தரவில்லை என தவெக கட்சியினர் குற்றம்சாட்டினர்.
அதன்பிறகு, மார்ச் 31, ஏப்ரல் 1 ஆம் தேதிகளில் விஜய் வெளியே வரவில்லை. ஏப்ரல் 2 ஆம் தேதி சென்னையில் இருந்து கிளம்பி திருச்சிக்கு சென்று, திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு, அங்கேயே பிரச்சாரத்தையும் மேற்கொண்டார் விஜய். திருச்சிக்கு வந்த விஜய் ஒரு இடத்தில் மட்டும் பேசிவிட்டு அப்படியே சென்னைக்கு கிளம்பினார்.
ஏமாற்றமடைந்த வேட்பாளர்கள்
தங்களையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்து விஜய் வாக்கு சேகரிப்பார் என தவெக திருச்சி மாவட்ட வேட்பாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி செய்யாமல், தான் போட்டியிடும் தொகுதியில் மட்டும் ஒரு இடத்தில் பேசிவிட்டு சென்னைக்கு ஃப்ளைட் ஏறினார் விஜய். அதன்பிறகு, இன்று விஜய் வெளியிலேயே வரவில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட தலைவர்கள், பொதுக்கூட்டங்கள், பிரச்சாரப் பரப்புரைகள் என சூறாவளியாகச் சுழன்று வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், காலை - மாலை என அடுத்தடுத்து மாவட்ட வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், தவெக தலைவர் விஜய்யோ, தேர்தல் நெருங்கும் சூழலிலும் கூட களத்தில் கடுமையாக இறங்கவில்ல.
விஜய் ரெஸ்ட்?
தவெக கட்சி துவங்கியது முதல் தமிழ்நாட்டில் உள்ள 16 மாவட்டங்களுக்குத் தான் தவெக தலைவர் விஜய் நேரடியாக சென்று, மக்களை சந்தித்துள்ளார். மீதமுள்ள 22 மாவட்டங்களுக்கு விஜய் இன்னும் ஒரு முறை கூட செல்லவில்லை. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு முறை கூட செல்ல முடியுமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது.
கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது 41 உயிர்கள் பலியான சம்பவம் கரும்புள்ளியாக அமைந்தது. அதன்பிறகு சில மாதங்களுக்கு பொது கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்த விஜய், தேர்தல் நேரத்திலும் மக்களைச் சந்திக்காமல் இருந்து வருவது தவெக கட்சியினர் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி, விஜய் தேர்தல் நேரத்திலும் வீட்டில் ஹாயாக ஓய்வில் இருந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
பாதுகாப்பை காரணம் சொல்லும் தலைமை
இதற்கிடையே தான் தவெக மாநில இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதினார். அதில், 'விஜய் பிரச்சாரத்தின் போது சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். ஆனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ அல்லது வாகனங்கள் தடையின்றி செல்லவோ எவ்வித காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. போக்குவரத்து மேலாண்மை முற்றிலும் இல்லாததால், பிரச்சார வாகனங்கள் நகர முடியாமல் பெரம்பூரிலேயே முடங்கின.
முறையான பாதுகாப்பு வழங்காதது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியின் ஜனநாயக ரீதியான பிரச்சார உரிமையைப் பறிப்பதாகும். தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, சென்னை மாநகர காவல்துறை மூலம் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications