சென்னையில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்து.. ரயில் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு
சென்னை: சென்னையில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானதையடுத்து ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்வதற்காக மின்சார ரயில் ஒன்று பேசின் பிரிட்ஜ் பணிமனையிலிருந்து கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு நேற்று மாலை 4.52 மணிக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது ரயில் நிறுத்துமிடத்தின் அருகே ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயற்சித்தார். ஆனால் ரயில் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரயிலில் இருந்து குதித்து ஓட்டுநர் பவித்ரன் உயிர் தப்பினர்.

கட்டுப்பாட்டை இழந்த ரயில்
அதே நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த ரயில் தடுப்பையும் மீறி நடைமேடை மீது ஏறி நின்றது. இந்த ரயில் கட்டுப்பாட்டை இழந்த நேரத்தில் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை. இதனால் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. ஆனால் ரயிலின் இரண்டு பெட்டிகளும் ரயில் மோதிய இடத்தில் இருந்த கடைகளும் சேதமடைந்தன.

ரயில் மோதிய வேகம்
ரயில் மோதிய வேகத்தில் புழுதி பறந்தது. மற்றபடி யாருக்கும் அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து அங்கிருந்த சில ரயில் பயணிகள் கூறுகையில், பணிமனையிலிருந்து ரயில் மெதுவாகத்தான் வந்தது. நடைமேடையில் இருந்தவர்களை பார்த்து ஓட்டுநர் விலகிச் செல்லுமாறு கையசைத்தார்.

யாருக்கும் காயமில்லை
அங்கிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும் ரயில் கட்டுப்பாட்டை இழந்ததால் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். நடைமேடையில் ரயில் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில் ரயில் நிலையத்திற்கு மெதுவாகத்தான் ரயில் வருகிறது. அப்போது திடீரென ரயிலின் என்ஜின் உள்ள பெட்டி நடைமேடையில் ஏறி இறங்கியது. இதனால் கடைகள் சேதமடைந்தன.

பதைபதைப்பு
இந்த வீடியோவை பார்க்கும் போதே நெஞ்சம் பதை பதைக்கிறது. இந்த நிலையில் ரயில் விபத்து குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரயில் ஓட்டுநர் பவித்ரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரயில் பிரேக் பிடிக்காமல் போனது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications