சென்னை கடற்கரை டூ தாம்பரம்! புறநகர் மின்சார ரயில் பயணிகளே அலர்ட்! முக்கிய அறிவிப்பு கொடுத்த ரயில்வே
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழித்தடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முன்னறிவிப்பு இன்றி ரயில்கள் சுமார் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அல்லோலப்பட்ட நிலையில், இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே வெளியிட்டுள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் புறநகர் ரயில்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பேருந்து, பைக்குகளில் சென்றால் டிராப்பிக்கில் சிக்கி கடும் அவஸ்தை பட வேண்டியிருக்கும். மெட்ரோ ரயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் அன்றாடம் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், தொழில் நிமித்தமாக புறநகரில் இருந்து சென்னை சிட்டிக்குள் வருபவர்கள் என பல்வேறு தரப்பினரும் சென்னை புறநகர் ரயில்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மின்சார ரயில் சேவையை நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதிகாலை 3.45 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர்மார்கெட்-அரக்கோணம், மூர்மார்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை , வேளச்சேரி - கடற்கரை (தற்போது சிந்தாதிரிப்பேட்டை) ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது.
இதில் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான ரூட்டில் பயணிகள் கூட்டம் அலைமோதும். பராமரிப்பு பணி காரணமாக அவ்வப்போது விடுமுறை தினங்களில் ரயில் சேவை குறைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் கிழமை (அக்.2) முன்னறிவிப்பு இல்லாம் பகல் நேரத்தில் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - தாம்பர்ம் ரூட்டில் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமையும் பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 44 மின்சார ரயில்களின் சேவை 8 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தாம்பரம் - கடற்கரை இடையே 30 ரயில்களும், செங்கல்பட்டு - கடற்கரை இடையே 11 ரயில்களும், திருமால்பூர் - கடற்கரை, சென்னை கடற்கரை - அரக்கோணம், காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே தலா ஒரு ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னை சென்டிரல் -அரக்கோணம் வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி ஜீவா இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை இரவு 11.30 மணி முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணி வரையில் 14 மின்சார ரயில் சேவை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே காலை 11 மணி, 11.50, மதியம் 12.30, 12.50, 1 மணி, 1.45, 2.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும். மறு மார்க்கமாக காலை 9.40, 10.20, 10.55, 11.30, மதியம் 12 மணி, 12.20, 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும்.












Click it and Unblock the Notifications