இந்த மாசம் "இபி பில்" கட்ட போறீங்களா? கரண்ட் பில் அதிகமா வருதா?.. காரணம் இதுதான்.. அரசுக்கு கோரிக்கை
சென்னை: கரண்ட் பில் அதிகமாக வருவதாக புலம்பும் மக்கள், இதுகுறித்த முக்கிய கோரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்து வருகின்றனர்.. என்ன நடந்தது?
தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது.
இதன்கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco), தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் (TANTRANSCO) என 2 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இலவசம்: தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன... இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது..
வழக்கமாக, வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும்.. அந்தவகையில், உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். இப்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய "ஸ்டேடிக்" என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.
முறைகேடுகள்: இதன்மூலம் மின்வாரிய ஊழியர்கள், அதை கணக்கீடு செய்து நுகர்வோர்களுக்கு தெரிவிப்பதையடுத்து, நுகர்வோர்களும், அந்த கட்டணங்களை செலுத்திவருகின்றனர்.. அதன்படி ஒவ்வொரு வீடாக சென்று மின் மீட்டர்களில் பதிவாகும் ரீடிங்குகளை கணக்கெடுக்கும் பணிகளை Tangedco மேற்கொண்டு வருகிறது. இதற்காக மின் கணக்கீட்டாளர்களை தனியாக நியமித்து பணிகளையும் மேற்கொள்கிறது. இதைத்தவிர, வீடுகளுக்கான மின்சாரம் 100 யூனிட்டுகள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆனால் சமீபகாலமாக சென்னையில் பல இடங்களில் மின்கட்டண கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் தங்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். குறிப்பாக சென்னையில், அண்ணாநகர், அம்பத்தூர், மாதவரம், அடையாறு, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தாமதமாகவே மின் கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறதாம்..
கூடுதல் கட்டணம்: அதிலும், ஒவ்வொரு முறையும், 5 நாட்கள், 8 நாட்கள் வரை தாமதமாக கணக்கெடுப்பதால், ரூ.300 முதல் ரூ.500 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் நொந்து சொல்கிறார்கள்.
உதாரணமாக, ஒரு வீட்டில் 2 மாதத்துக்கு 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் நிலையில், தாமதமாக வந்து கணக்கெடுப்பதால், கூடுதலாக 10 முதல் 20 யூனிட் வரை பயன்படுத்தப்படுகிறது.. இதன் காரணமாக 500 யூனிட்டை தாண்டி மின் அளவு சென்று விடுவதால், அதற்கும் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறதாம்..
கணக்கெடுப்பு: தமிழக அரசு மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்த்தும், அதை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை. 2 மாதத்தையும் தாண்டி கணக்கெடுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதாயிருக்கிறது.. அதனால், மின் ஊழியர்கள் சரியான நாளில் வந்து கணக்கெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுந்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் சொல்லும்போது, ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் கட்டணம் தாமதமாக கணக்கெடுக்கப்படுகிறது. தாமதம் ஏற்படும் இடங்களில் 2 மாதங்களுக்கான சராசரி எடுத்து, அதில் காலதாமதமான நாட்களை கழித்தே மின்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது' என்றார்.
எனினும் மாதந்தோறும் மின்கட்டணம் குறித்து அரசு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாமலேயே உள்ளது... செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது இதுகுறித்து நிறைய முறை விளக்கம் தந்துள்ளார்.. "இப்போதைக்கு 2 மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படுகிறது... மாதந்தோறும் மின் கணக்கீடு எடுக்க வேண்டும் என்றால் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.. புதிதாக ஆட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது.
கேள்விக்குறி: மின்மாற்றிகளுக்கும் சேர்த்து மீட்டர் பொருத்துவது தொடர்பாக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு டெண்டர் நிலையில் உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டால் கணக்கெடுக்கும் பணியாளர்களின் வேலை கேள்விக்குறி ஆகிவிடும்.. அதனால், எதாவது ஒரு திட்டம் மட்டும் கொண்டு வர முடியும்.. அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன், திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மாதந்தோறும் மின் கணக்கீடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
எனினும் மாதந்தோறும் கணக்கீடு திட்டம் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.. இந்த விவகாரத்தில், பாமக டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் ஏற்கனவே தலையிட்டிருந்தனர்..
"இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும்போது, குறிப்பிட்ட அந்த மாதத்தில் நுகர்வோருக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.. மாதாந்திர மின்கணக்கீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும்.. இப்படி மாதந்தோறும் மின்கட்டணத்தை வசூலிப்பதில் மின்சார வாரியத்திற்கு எந்த பிரச்சினையும் கிடையாது.. எனவே, மாதந்தோறும் மின்கணக்கீட்டை செய்து, பொதுமக்களின் பாரத்தை குறைக்க வேண்டும்" கேட்டுக் கொண்டிருந்தனர்..
தமிழக அரசு: தற்போது, பொதுமக்கள் தரப்பிலும் இருந்தும் கோரிக்கைகள் வலுத்துள்ளதால், மாதந்தோறும் கணக்கீடு திட்டத்தை விரைவில் திமுக அரசு அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications