அண்ணாச்சிக்கு என்னாச்சு! சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி
சென்னை: பண மோசடி விவகாரத்தில் சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பல கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டுள்ளது.
சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் இந்தியன் வங்கியில் 150 கோடி ரூபாய் மற்றும் ஆக்சிஸ் வங்கியில் 82 கோடி ரூபாய் கடனாகப் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
போலி ஆவணங்கள் கொடுத்து அவர்கள் கடனை பெற்றதாகப் புகார்கள் எழுந்தன. கடந்த 2017இல் ஷோரூம் ஒன்றைக் கட்ட இந்தியன் வங்கியிடம் கடனாகப் பெற்றுள்ளனர். இருப்பினும், அந்த கடன் தொகையை அவர்கள் அதற்காகப் பயன்படுத்தாமல் வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் விசாரித்த அமலாக்கத்துறை கடந்த ஜூலை மாதம் 234 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது. இதற்கிடையே ஆக்சிஸ் வங்கியும் இதேபோன்ற புகாரை சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் மீது அளித்திருந்தது.
இதையும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இதனிடையே இந்த வழக்கில் இப்போது சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 66.93 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் நகை கடை ஜப்தி செய்யப்பட்டது. இந்தியன் வங்கிக்குத் திருப்பி தராத கடன் பாக்கி குறித்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சொத்து ஜப்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications