துப்பாக்கியோடு துணை ராணுவம் நிற்க.. உள்ளே போன "பர்கர்".. பொன்முடி வீட்டு ரெய்டில்.. ஷாக் சம்பவம்
சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் நடக்கும் அமலாக்கத்துறை ரெய்டில் இரண்டு சுவாரசியமான சம்பவங்கள் இன்று நடந்தன.
அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை ரெய்டு தொடங்கிய போதே பரபரப்பு தொற்றிக்கொண்டது. 7 மணிக்கு ரெய்டு தொடங்கியது. அப்போது விழுப்புரம் வீட்டில் ரெய்டு செய்ய முடியாமல் அமலாக்கத்துறையினர் கடுமையாக திணறினர்.

அங்கே அதிகாரிகள் 20 பேர் குவிந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் முதல் கட்டமாக அவரின் வீட்டை துணை ராணுவப்படை சுற்றி வளைத்தனர்.
அவரின் வீட்டை சுற்றி துணை ராணுவப்படை துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டனர். அதன்பின் அதிகாரிகள் கேட்டை திறந்து உள்ளே சென்றனர். ஆனால் உள்ளே யாரும் இல்லை. செந்தில் பாலாஜியின் உதவியாளர் செல்வம் மற்றும் ஒரே ஒரு தோட்டக்காரர் மட்டுமே இருந்தார் என்று கூறப்படுகிறது. மற்றபடி விழுப்புரம் வீடு பூட்டப்பட்டு இருந்தது.
அதை திறக்க ஆள் இல்லை. இதனால் அதிகாரிகள் உள்ளே செல்வதா இல்லையா என்று தெரியாமல் குழப்பத்திற்கு உள்ளாகினர். முதலில் பூட்டை உடைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் செல்வம் தனது வீட்டிற்கு சென்று பொன்முடி வீட்டின் இன்னொரு சாவியை எடுத்து வந்தார்.
இதையடுத்து பூட்டை உடைக்காமல் அதிகாரிகள் உள்ளே சென்றனர். ஆனால் உள்ளே இருந்த பீரோ போன்ற எந்த லாக்கரின் சாவியும் உதவியாளரிடம் இல்லை. பீரோவின் சாவி இல்லாததால் நீண்ட நேரம் அதிகாரிகள் காத்து இருந்தனர்.
இதையடுத்து பீரோவை உடைக்க முடியாது என்பதால் போலி சாவி தயாரிக்கும் நபரை அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கே தற்போது சாவி தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம் சென்னையில் ரெய்டு நடக்கும் வீட்டிற்கு இன்று பர்கர் டெலிவரி செய்யப்பட்டது.
ஆன்லைன் மூலம் அதிகாரிகள் பர்கர் ஆர்டர் செய்தனர். காலை 7 மணிக்கே இவர்கள் ரெய்டை தொடங்கியதால் காலை உணவு சாப்பிடவில்லை. இதனால் சில மணி நேரங்களுக்கு முன் 15 பர்கர்களை ஆர்டர் செய்தனர். வீட்டை சுற்றி துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் நிற்க டெலிவரி பாய் ஒருவர் மட்டும் வந்து 15 பர்கர்களை டெலிவரி செய்தார். இந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன காரணம்?: இந்த ரெய்டுக்கான அதிகாரபூர்வ காரணத்தை அமலாக்கத்துறை சொல்லவில்லை என்றாலும் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் இந்த ரெய்டு நடப்பதாக கூறப்படுகிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கியதன் கீழ் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி பொன்முடி மகன் கவுதம சிகாமணி செய்த முதலீடு ஒன்றுதான் ரெய்டுக்கு காரணம் என்கிறார்கள். இவர் ஆர்பிஐ ஒப்புதல் இன்றி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் முதலீடு செய்துள்ளார். அங்கே இருக்கும் பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் கடந்த 2008ல் முதலீடு செய்துள்ளார்.
சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பங்குகளை இவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் கருப்பு பணத்தை அவர் வெள்ளையாக்கியதாக அமலாக்கத்துறை சந்தேகம் கொண்டுள்ளதாம். இதற்கான ஆதாரங்கள் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் விதமாக 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்ததாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது.
இதில் அமைச்சராக அப்போது இருந்த பொன்முடிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் கீழ் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications