இவ்வளவு பணமா? செந்தில் பாலாஜியை சிக்க வைத்த ரூ.1.63 கோடி.. மாட்டிய ஆதாரம்! கைதுக்கு காரணம் சொன்ன ED
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் காட்டப்பட்ட வருமானத்தை விட அதிக பணம் இருந்ததாக தெரிவித்து இருக்கும் அமலாக்கத்துறை, அவரை வெளியில் விட்டால் ஆதாரங்கள் அழிக்கப்படலாம் என்பதால் கைது செய்வதாக தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரை ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இடைக்கால ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அதே நேரம் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை திமுகவினர் உட்பட பல்வேறு தரப்பினர் எழுப்பி வந்தனர். அண்மையில் நடைபெற்றை வருமான வரித்துறை சோதனையின் தொடர்ச்சியா, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையில் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட முறைகேடுகள் தொடர்பாகவா அல்லது, அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது பதிவான முறைகேடு குறித்தா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜி கைது தொடர்பான காரணத்தை அமலாக்கத் துறை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதில்
"செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் ரூ.1.34 கோடி டெபாசிட் தொகை இருந்து உள்ளது. அதேபோன்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் வங்கிக் கணக்கில் ரூ.29.55 லட்சம் தொகை இருந்து உள்ளது.
செந்தில் பாலாஜி குடும்பத்திற்கு தொடர்புடைய 25 கோடி மதிப்பிலான பினாமி சொத்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 25 கோடி மதிப்பிலான நிலம் செந்தில் பாலாஜியின் பினாமிக்கு வெறும் ரூ.10.88 லட்சத்துக்கு விற்கப்பட்டு உள்ளது. சட்டவிரோதமாக செந்தில் பாலாஜி சம்பாதித்த பணத்தை கொண்டு நிலம் வாங்கி இருக்கலாம்.
வருமான வரித் தாக்கலின்போது செந்தில் பாலாஜி தெரிவித்த வருமானத்தைவிட அவரது வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் மிக மிக அதிகம். பலமுறை விசாரணைக்கு அழைத்தும் செந்தில் பாலாஜி வராமல் வாயிதா வாங்கி வந்தார்" என்று தெரிவித்து உள்ளது. அத்துடன் என்னென்ன ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டு உள்ளன என்ற விபரத்தையும் அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனை தொடர்பான தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான முக்கிய காரணத்தை அமலாக்கத்துறை தெரிவித்து இருக்கிறது.
அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜியை வெளியே விட்டால் அவருக்கு எதிரான ஆதாரங்களை அழிக்கவோ, கலைக்கவோ முயற்சி செய்வார் என்று அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கின் கீழ் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருக்கிறது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு என்பது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கியதாக கூறி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறையின் சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்தது.












Click it and Unblock the Notifications