செந்தில் பாலாஜிக்கு சலுகைகள்.. 182 நாள் சிறையில் இருப்பதாக கூறுவது தவறு.. ஜாமீன் வழங்க ED எதிர்ப்பு
சென்னை: செந்தில் பாலாஜி கைதாகி 182 நாட்களாக சிறையில் இருப்பதாக செந்தில் பாலாஜி கூறுவது தவறு. அமைச்சர் என்கிற முறையில் அனைத்து சலுகைகளும் செந்தில் பாலாஜி, அனுபவித்து வருகிறார் என்று அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப் பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்திருந்தனர். ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை அதிகாரியான அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தாசரி சார்பில், அமலாக்கத்துறை சிறப்பு குற்றவியல் வக்கீல் என்.ரமேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

இந்த வழக்கின் விசாரணையின்போது, செந்தில் பாலாஜி ஒத்துழைக்கவே இல்லை. இப்போது, ஜாமீன் மனுவில் விசாரணைக்கு ஒத்துழைத்ததாக கூறுவது தவறு. செந்தில் பாலாஜியிடம் விசாரணை முடிவடைந்துவிட்டது என்பதால் ஜாமீன் வழங்க சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறிவிட்டதாக கருத முடியாது. அவர், திரும்பத் திரும்ப ஒரே காரணத்தை கூறி ஜாமீன் கேட்டு மீண்டும் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கைதாகி 182 நாட்களாக சிறையில் இருப்பதாக செந்தில் பாலாஜி கூறுவது தவறு. இலாகா இல்லாத அமைச்சராக கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை தனியார் மருத்துவமனையில் இருந்தார். ஜூலை 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை சிறையில் உள்ள மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர், நவம்பர் 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை மருத்துவமனையில் இருந்தார்.
அமைச்சர் என்கிற முறையில் அனைத்து சலுகைகளும் அனுபவித்து வரும் செந்தில் பாலாஜி, செல்வாக்கான நபர் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே, ஜாமீன் கேட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications