தொடங்கியது என்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங்! முதல் சுற்றில் 26,654 மாணவர்கள் பங்கேற்பு!
சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. மொத்தம் 3 சுற்றுகளாக இந்த கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் உள்ள சுமார் 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதியாக ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

ஜூன் 12 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்ட நிலையில் அவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10 ஆம் தேதி வெளியிடப்பட்டது. சான்றிதழ் பதிவேற்றிய ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டு, அதனடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில், 65 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27 வரை நடைபெறும் என்றும், அதன் பிறகு ஜூலை 29 முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
அதன்படி, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வும் நடைபெற்றது. சிறப்பு பிரிவில் மொத்தமுள்ள 9,639 பொறியியல் படிப்புக்கான இடங்களில், 836 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவில் 92 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3 வரை 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல் சுற்று கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பொதுப்பிரிவில் தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 26 ஆயிரத்து 654 வரையிலான இடங்களை பிடித்த மாணவர்களும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் முதல் 1,343 இடங்களை பிடித்த மாணவர்களும் பங்கேற்கின்றனர்.
மாணவர்கள் தங்களுடைய விருப்ப கல்லூரிகளை வரும் 31ஆம் தேதி வரை தேர்வு செய்யலாம். விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணை ஆகஸ்டு 1ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். தற்காலிக ஒதுக்கீடு ஆணையை ஆகஸ்டு 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகு, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஆகஸ்டு 3ஆம் தேதி காலை இறுதி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும். இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள், ஆகஸ்டு 7ஆம் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும்.
இதைத்தொடர்ந்து, பிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 9 ஆம் தேதி வரையும், எஸ்சி, அருந்தியர் பிரிவில் ஏற்படும் காலியிடங்களில் எஸ்சி பிரிவு மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11-ம் தேதிகளிலும் நடைபெறும். செப்டம்பர் 11-ம் தேதி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிடும். அதைத்தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடங்கும்.












Click it and Unblock the Notifications