வேற வழி தெரியலை சார்.. என்ன பண்ண சொல்றீங்க.. துப்புரவு பணிக்கு அப்ளை செய்த என்ஜீனியர் குமுறல்
சென்னை: "வேற வழி தெரியல சார்.. எங்களை என்ன பண்ண சொல்றீங்க?" என்று தமிழக அரசின் துப்புரவு பணிக்காக அப்ளை செய்த என்ஜினியரிங் பட்டதாரி அருள் கேள்வி எழுப்புகிறார்.
தமிழக அரசின் தலைமைச் செயலகம் சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது. அங்கு துப்பரவுப் பணிகளுக்கான 14 இடங்கள் காலியாக இருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. காலியாக இருப்பதோ 14 இடங்கள்தான், ஆனால் வந்த விண்ணப்பங்களோ 4 ஆயிரத்துக்கும் மேல்.
இதனை அப்ளை செய்தவர்கள் பெரும்பாலும் யார் என்று பார்த்தால், எம்.டெக், பி.டெக், எம்.பி.ஏ போன்ற பெரிய படிப்பு படித்த பட்டதாரிகள் என்பதுதான் ஷாக்!!
கூலி வேலை
இதில் ஒருவர்தான் தன்சிங் அருள். இவர் என்ஜினியரிங் படித்துள்ளார். எங்கே தேடியும் வேலை கிடைக்கவில்லை. தூத்துக்குடியில் தினக்கூலியாக வேலை பார்த்து வாழ்க்கையை ஓட்டி வந்திருக்கிறார். அங்கு தரும் கூலி பத்தாமல், சென்னையில் நண்பர்களுடன் தங்கியிருந்து வேலை தேடி வருகிறார்.
வேலை கிடைக்கல
இவ்வளவு பெரிய படிப்பு படிச்சுட்டு துப்புரவு வேலைக்கு அப்ளிகேஷன் போடுகிறீர்களே என்று கேட்டால், "எனக்கு வயது 23 ஆகிறது. நான் ஒரு இன்ஜினியராக தகுதி பெற்றும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. 4 மாசமா கஷ்டப்பட்டுட்டு வர்றேன். வேறு வழி தெரியல. என்ன பண்ண சொல்றீங்க? அதனால்தான் இந்த துப்புரவு பணிக்கு அப்ளை பண்ணேன். இந்த வேலை கிடைச்சா, ஓரளவாவது சம்பளம் வருமே" என்று நொந்து போய் சொல்கிறார்.
4000 அப்ளிகேஷன்கள்
இப்படி 4000 அப்ளிகேஷன்கள் வந்து குவிந்திருக்கிறதே என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு "வருத்தமாதான் இருக்கிறது. மாநில மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டியது எங்கள் கடமைதான் ஆனால் ஒரே ஆண்டில் 60 லட்சம் வேலைவாய்ப்பினை எங்களால் உருவாக்க முடியாது.
சுயதொழில்
நிறைய இளைஞர்கள் பாதுகாப்பு கருதி அரசு வேலைதான் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுயமாக தொழில் தொடங்கவும் வேண்டும், தனியார் துறையிலும் முயற்சி செய்ய வேண்டும்" என்றார்.