அம்மோனியா கசிவு விவகாரம்: எண்ணூர் கோரமண்டல் ஆலை மீண்டும் இயங்க அனுமதி! ஆய்வுக்கு பின் திடீர் முடிவு!
சென்னை: எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை எண்ணூரில் கடற்பரப்பில் இருந்து கோரமண்டல் தனியார் உர ஆலைக்கு கடலுக்கு அடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 26ஆம் தேதி நள்ளிரவில் வாயு கசிந்தது. இதனால் ஆலைக்கு அருகே உள்ள சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் உள்ளிட்ட 8 கிராமங்களில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன.

அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 52 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கொந்தளித்த அப்பகுதி மக்கள்,கோரமண்டல் ஆலையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தொழிற்சாலை முன் உள்ள விரைவு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமோனியா வாயு கசிவு முற்றிலும் நிறுத்தப்பட்டதாக அறிவித்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வாயு கசிவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது. இந்தக் குழு 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, கோரமண்டல் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட 7 பேர் கொண்ட குழுவினர், அந்த நிறுவனம் தற்காலிகமாக செயல்பட தடை விதித்து நோட்டீஸ் ஒட்டினர்.
கோரமண்டல் ஆலைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டதால் ஒரு தரப்பினர் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும், பெரிய குப்பம் சின்ன குப்பம் பகுதி மக்கள், நிரந்தரமாக இந்த தொழிற்சாலையை மூட வேண்டும் அதுவரை எங்களுடைய போராட்டம் கைவிட மாட்டோம் என்று கூறினர்.
இந்நிலையில், எண்ணூரில் கோரமண்டல் தொழில்சாலை மீண்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்த பின் மீண்டும் செயல்பட வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளது என்றும், நிறுவனத்தின் அவசரகால நடவடிக்கைகளுக்கும் வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஐஐடி நிபுணர்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய குழு கோரமண்டல் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அந்தக் குழுவே, ஆலை மீண்டும் இயங்க அனுமதி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications