வடசென்னையில் தொடரும் சோகம்! அம்மோனியா வாயு கசிவு.. எண்ணூர் மக்கள் போராட்டம்
சென்னை: வடசென்னையான எண்ணூரில் ஆலையிலிருந்து அமோனியா வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்த தொழிற்சாலை வாயில் முன்பு அமர்ந்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மிக்ஜாம் புயலால் வடசென்னையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி பலர் பாதிக்கப்பட்டனர். மீனவர்களின் வலைகள், படகுகள் சேதமடைந்தன. இது போதாகுறைக்கு சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்திலிருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

இதுவும் அந்த பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பை கொடுத்தது. கடலுக்குள்ளும் இந்த எண்ணெய் சென்றுவிட்டது. இந்த சோகமே இன்னும் வடியாத நிலையில் தற்போது எண்ணூர் பகுதி மக்களுக்கு மீண்டுமொரு சோகம் ஏற்பட்டுள்ளது.
கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் நிறுவனம் திருவொற்றியூர் அருகே எர்ணாவூர் கிராமத்தில் உள்ளது.இந்த நிறுவனம் உரத்தொழிற்சாலையையும் அமோனியா சேமிப்பு தொழிற்சாலையையும் இயக்கி வருகிறது. இந்த ஆலை கடற்கரையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
அதில் கப்பல்களில் கொண்டு வரப்படும் திரவ அமோனியா ரசாயனம் கொண்டு வரப்பட்டு கிடங்கில் சேமிக்கப்படுகிறது. கடலுக்குள் அடியில் 500 மீட்டர் ஆழத்தில் இந்த குழாய் உள்ளது. இதில் விரிசல் ஏற்பட்டு அமோனியா திரவம் கடலில் கலந்து காற்றில் பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணிக்கு ஏற்பட்டது.
குழாயில் இருந்து திரவம் வெளியேறிய பகுதியில் கடல் பகுதியில் கொப்பளிப்பு ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்த வாயுவானது சின்னகுப்பம், பெரிய குப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, வேன்களில் வேறு இடங்களுக்கு உடனே வெளியேறினர்.
தகவலறிந்து 30-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள், 20க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மூலம் அவர்கள் சமுதாய நலக் கூடங்கள், தேவாலயங்களில் தஞ்சமடைந்தனர். மூச்சுத்திணறலால் 30 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் ஆலையிலிருந்து வாயு கசிவு ஏற்படவில்லை என கோரமண்டல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் நிறுவனத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலுக்குடியில் புதைத்த குழாய்கள் எல்லாம் ரொம்ப காலத்திற்கு முன்பு பதியப்பட்டவை. அவற்றை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications