லஞ்சம் வாங்கி கட்டுக்கட்டாக பணம் சேர்த்த பாண்டியன் சஸ்பெண்ட் - தமிழக அரசு அதிரடி
லஞ்ச புகாரில் சிக்கி கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்றிருந்த நிலையில் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: லஞ்ச புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பாண்டியன் வீட்டிலிருந்து ரூ.1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் இருக்கக்கூடிய பாண்டியன் பணியாற்றும் அலுவலகம், சாலிகிராமத்திலுள்ள அவருடைய வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனைக்கு போன அதிகாரிகளே அதிர்ச்சியடையும் வகையில் கட்டுக்கட்டாக பணம், கிலோ கணக்கில் நகைகளை லஞ்சப்பணத்தில் சேர்த்து வைத்திருந்தார் பாண்டியன். பாண்டியன் வீடு அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையில் ரூ.1.37 கோடி பணம், 3 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.6 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அடுத்தக்கட்டமாக பாண்டியனை விசாரிக்க சம்மன் கொடுத்து நேரில் வரவழைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் வங்கி லாக்கரில் அவர் சொத்து ஆவணங்கள் மற்றும் தங்க நகைகளை வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்திருக்கிறது. அது தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
சென்னை மற்றும் புதுக்கோட்டையில் அவர் வங்கிகளில் லாக்கர் வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே அது தொடர்பான அனைத்து விவரங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்து வங்கிகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
பாண்டியன் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து ஏற்கனவே அவரிடம் 18 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதனுடைய மதிப்பு ரூ.7 கோடி ஆகும். அதேபோல வங்கிகளில் வைப்பு தொகையாக ரூ.37 லட்சம் அவர் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
பாண்டியன் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே இவரிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் லஞ்ச புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல்துறை கண்காணிப்பாளர் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்றிருந்த நிலையில் பாண்டியனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications