அதிமுகவில் ஓயாத அலைகள்... இடைவிடாமல் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்றும் ஆலோசனை...பதைபதைப்பில் தொண்டர்கள்
சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது நாளை அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் அமைச்சர்கள், அதிமுக மூத்த தலைவர்களுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 7-ல் அறிவிக்கப்படுகிறது. அதிமுகவின் செயற்குழு முடிவடைந்த நிலையில் இருந்தே ஈபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஈபிஎஸ்ஸை ஆதரிக்கும் அமைச்சர்கள்
சென்னை தலைமை செயலகம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் 18 அமைச்சர்கள் இதுவரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆட்சியும் கட்சியும் முதல்வர் எடப்பாடி வசம் இருப்பதுதான் தேர்தலில் வெல்வதற்கான வியூகமாக இருக்கும் என்பது அமைச்சர்கள் பலரின் கருத்து.

சென்னை திரும்பிய ஓபிஎஸ்
ஆனால் தமக்கும் செல்வாக்கு இருக்கிறது; ஆகையால் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் நானே என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ். கடந்த சில நாட்களாக தேனி பண்ணைவீட்டில் முகாமிட்டு அங்கு ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று சென்னை புறப்பட்டு வந்தார் ஓபிஎஸ்.

ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை
சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் இன்று காலை மூத்த தலைவர்கள் கேபி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். அதேநேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று சந்தித்து பேசினார். ஏற்கனவே ஓபிஎஸ்ஸை தேனி பண்ணை இல்லத்தில் உதயகுமார் சந்தித்து பேசியிருந்தார்.

அதிமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பு
இடைவிடாமல் அதிமுக தரப்பினர் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனைகள் சுமூகமாக முடிவடைந்து இருதரப்பும் ஒருமித்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு. அப்படியான சூழ்நிலை ஏற்படாவிட்டால் அதிமுக இன்னொரு பிளவை எதிர்கொள்ள நேரிடும். இது தேர்தல் களத்தில் வரலாறு காணாத பின்னடைவை தந்துவிடும் என்பதும் அதிமுக தொண்டர்கள் கவலை.












Click it and Unblock the Notifications