“மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.. வரவேற்கிறேன்”.. சாஃப்ட் டோனில் சொன்ன எடப்பாடி பழனிசாமி!
சென்னை: "மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்கிறேன். எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமி பாஜக அரசிடம் வலியுறுத்துவாரா எனக் கேள்வி எழுப்பி இருந்தார் ஸ்டாலின்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் இந்த திட்டத்திற்கு மாற்றாக VB G RAM G என அழைக்கப்படும், விக்சித் பாரத் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டம் என்பதை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக மசோதா தாக்கல் செய்ய கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், பாஜக உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக இந்த விவகாரத்தில் குரல் எழுப்பாததைக் கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு. ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 100 நாட்களிலிருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், மற்றும் ஊதியமும் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
மக்களை ஏமாற்றி, வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. அவர் பதிவிட்டு இருந்த நீண்ட எக்ஸ் தள பதிவில் ஏன் இதை பற்ற எந்த குறிப்பும் இல்லை? இது போன்ற பச்சை துரோகத்தை செய்து விட்டு பச்சைத் துண்டு பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கிறது?
தற்போது, மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்த உத்தேசித்துள்ளதை வரவேற்கிறேன். எனினும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயர் எவ்வித மாற்றமுமின்றி தொடர மத்திய அரசை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications