விரக்தியின் விளிம்பில் திமுகவினர் அடாவடி.. அதிமுகவினர் மீது அட்டாக்! கோபத்தின் உச்சியில் எடப்பாடி!
சென்னை: நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்ட கழக நிர்வாகிகள் மீதும், தொண்டர்கள் மீதும், திமுக-வினர் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வருகின்றன. இந்தப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," குறிப்பாக, உடுமலைப்பேட்டை தொகுதி, பொள்ளாச்சி தெற்கு (கிழக்கு) ஒன்றியம், தொண்டாமுத்தூர் தோட்டத்து சாலையில் வசிக்கும் கழக உடன்பிறப்பு திரு. மாரிமுத்து என்பவர், 24.4.2026 அன்று தனது மாற்றுத் திறனாளி மகனை பள்ளியில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

அப்போது, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல் என்பவர், தேர்தல் நாளன்று தனக்கு எதிராக பணியாற்றியதை சுட்டிக்காட்டி, தான் ஓட்டி வந்த காரை, கழக நிர்வாகி மாரிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது கொலை வெறியுடன் மோதியுள்ளார். இதில் மாரிமுத்துவும், அவரது மகனும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.
அப்போது, அவ்வழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த அருண், ஜெகநாதன், சுகுமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர், படுகாயமடைந்த மாரிமுத்துவையும், அவரது மகனையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்கு, தொண்டாமுத்தூர் அரசு பள்ளி அருகே உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் செல்லும்போது, திமுக ஒன்றியச் செயலாளர் கதிர்வேல், அவரது மனைவி பானுமதி, அவரது தந்தை கோபால்சாமி மற்றும் திமுக-வைச் சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட சிலர், அருண் ஒட்டி வந்த நான்கு சக்கர வாகனத்தை உடைத்து சேதப்படுத்தியதுடன், காப்பாற்றிய நால்வர் மீதும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
படுகாயமடைந்த கழக நிர்வாகி திரு. மாரிமுத்து மற்றும் அவரது மாற்றுத் திறனாளி மகன் இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், கிருஷ்ணகிரி தொகுதியில், கழகத்தின் சார்பில் திரு. இதயாத் என்பவர் 1-வது வார்டு வாக்குச் சாவடி முகவராக நியமிக்கப்பட்டு தீவிர தேர்தல் பணியாற்றி வந்த நிலையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை திமுக-வினர் தாக்கியுள்ளனர். காயமடைந்த திரு. இதயாத், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
சிகிச்சை பெற்றுவரும் கழக நிர்வாகிகள், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அடாத ஆட்சி முடியும் நேரத்தில்கூட, விரக்தியின் விளிம்பில் உள்ள திமுக-வினர் செய்யும் செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications