தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர்
சென்னை: தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜயை ஆதரித்த எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் சபாநாயகரிடம் கொடுத்த புகார் மனுவை வாபஸ் பெற தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். அதே நேரத்தில் தற்போது கட்சியில் சேர்ந்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் 25 தொகுதிகளிலும் உங்களையே நிற்கவைக்கிறேன் என விஜய் சொல்லியுள்ளாராம். இதனால் என்ன முடிவெடுப்பது என தெரியாமல் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தரப்பு குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உருவான உள்கட்சி மோதல் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் சிக்கலில் உள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சி கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி
இதன் பின்னணியில், "மன்னிப்பு கடிதம்" விவகாரம் தற்போது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை விரிவாக்கத்தில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக சென்ற அதிருப்தி எம்.எல்.ஏக்கள், கடைசி நேரத்தில் அமைச்சரவை பட்டியலில் இடம்பெறாததால் கடும் ஏமாற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக எஸ்.பி.வேலுமணி அணியினர், ஆரம்பத்திலேயே சரியான முடிவு எடுக்காமல் விட்டுவிட்டோம் என்ற மனநிலையிலேயே இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி
இந்த சூழலில், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு திரும்பும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. இதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், "கட்சியில் மீண்டும் சேர தயாராக இருக்கிறோம்; ஆனால் பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சி பதவிகளை திரும்ப வழங்க வேண்டும்" என்று வேலுமணி தரப்பு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுமையான நிபந்தனையை முன்வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகுதி நீக்கம்
"முதலில் அனைவரும் மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும். அதன் பிறகே அடுத்த கட்ட பேச்சு நடக்கும்" என்று கூறப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மன்னிப்பு கடிதம் தொடர்பாகவே தற்போது பெரும் குழப்பம் நிலவுகிறது. ஏனெனில், சட்டமன்றத்தில் கொறடா உத்தரவை மீறிய உறுப்பினர்களை கட்சி தலைமையே குறிப்பிட்ட காலத்துக்குள் மன்னித்தால், தகுதி நீக்க நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் சட்ட நடைமுறைகள் கூறுகின்றன. அதற்கான அவகாசம் மே 28-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
மன்னிப்பு கடிதம்
இதனால், சில எம்.எல்.ஏக்கள் "முதலில் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்" என்ற எண்ணத்தில் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவுக்கு திரும்ப தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், "எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?" என்ற மனநிலையிலும் இன்னும் சிலர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், எஸ்.பி.வேலுமணி மீது மட்டும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் விஜய்
"இந்த கிளர்ச்சிக்கு முக்கிய காரணம் வேலுமணிதான்" என்ற கோபம் எடப்பாடி தரப்பில் நீடிப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. இதற்கிடையில், முதல்வர் விஜய் தரப்பிலிருந்தும் வேலுமணி அணியினருக்கு தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. "எம்.எல்.ஏ பதவி போனாலும் கவலைப்பட வேண்டாம். தவெகவில் இணைந்துவிடுங்கள். இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறலாம்" என்ற வகையில் சமாதான முயற்சி நடப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தவெகவில் இணைவார்களா?
ஒருவேளை 25 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு தவெக தனது பலத்தை மேலும் அதிகரிக்க முயற்சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி ஆதரவு இல்லாமலேயே தனிப்பெரும்பான்மையை பெறும் அரசியல் கணக்கும் தவெக தரப்பில் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால், "மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவுக்கு திரும்புவார்களா? அல்லது பதவியை இழந்தாலும் தவெகவில் இணைவார்களா?" என்ற கேள்வி தற்போது தமிழக அரசியலில் பெரிய சஸ்பென்ஸாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications