சென்னையில் மழை வந்ததுமே ஆள் “எஸ்கேப்”.. சேலத்துக்கு ஓடி பதுங்கிவிட்டார் எடப்பாடி: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் மழை வந்தவுடன் சேலத்துக்கு ஓடி பதுங்கியவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார்; ஆட்சியில் இல்லாவிட்டாலும் வெள்ள பாதிப்புகளை பார்க்க வரமாட்டார் எடப்பாடி பழனிசாமி என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற கும்மிடிப்பூண்டி முன்னாள் திமுக எம்எல்ஏ வேணு இல்ல திருமண விழாவை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். அதைத்தொடர்ந்து மணமக்களை வாழ்த்துப் பேசினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும், மக்கள் பணியை பொறுத்தவரை, நாம் என்றைக்கும் இருப்போம்; மக்களுக்காக பாடுபடுவோம்; பணியாற்றுவோம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதனால்தான், ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம், இன்றைக்கு ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மக்களுக்காக செய்திருக்கிறது.
என்னென்ன உறுதிமொழிகளை தந்தோமோ, தந்த உறுதிமொழிகள் மட்டுமல்ல, தராத திட்டங்களையும், வாக்குறுதிகளையும் இன்றைக்கு நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். மக்களால் போற்றப்படக்கூடிய ஒரு ஆட்சியாக இன்றைக்கு திமுக இருந்து கொண்டிருக்கிறது.
ஆனால் மக்களால் ஓரங்கட்டப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி பொறாமை தாங்க முடியாமல், திமுக அரசு இப்படியெல்லாம் சாதனைகளை செய்து மக்களுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்து கொண்டிருக்கிறதே; இன்னமும் அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதே என்கின்ற பொறாமையின் காரணமாக செல்லாக்காசாக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தி.மு.கழகத்தின் ஆட்சியினுடைய செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
அதோடு மட்டுமல்ல, திமுக-வின் கூட்டணி விரைவில் உடையப்போகிறது என்று பேசியுள்ளார். இதுவரை கற்பனையில் தான் மிதந்து கொண்டிருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர் ஜோசியராகவே மாறியிருக்கிறார். எப்போது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்கு புரியவில்லை. விரக்தியின் எல்லைக்கே போயிருக்கிறார். ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எங்களுடைய கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது பதவிக்கு வரவேண்டும் என்ற கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது கொள்கை கூட்டணி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
எங்கள் கூட்டணிக்குள் விவாதம் நடக்கலாம்; எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம்; எங்களுக்குள் பல விவாதங்கள் நடக்கின்றபோது அதில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது! விவாதங்கள் இருக்கலாமே தவிர விரிசல் ஏற்படவில்லை; விரிசல் ஏற்படாது. மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே, அதுபோல இன்றைக்கு பக்கத்து கட்சியில், தன்னுடைய கட்சியை எப்படி வளர்ப்பது என்ற யோக்கியதை இல்லை; வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய கட்சியைப் பார்த்து வளர்ந்து இன்றைக்கு மக்களிடத்தில் ஓங்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கக்கூடிய நம்முடைய இயக்கத்தைப் பார்த்து, நம்முடைய அரசை பார்த்து, இன்றைக்கு ஜோசியம் பார்த்து கொண்டிருக்கக்கூடிய பழனிசாமி சொல்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மழைக்காலத்தில் மக்களை சந்தித்தோம். இப்போது ஆட்சி என்கின்ற அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தினால், இன்றைக்கும் மக்களை சந்தித்து, மக்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டறிந்து அந்தப் பணிகளை செய்கிறோம்.
சென்னையில் மழை வந்தது. முதலமைச்சராக இருக்கும் நான் வந்தேன். துணை முதலமைச்சராக இருக்கும் தம்பி உதயநிதி வந்தார். அமைச்சர் பெருமக்கள் வந்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெருத்தெருவாக வந்தார்கள். அதேபோல, ஊராட்சி, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சியில் இருக்கக்கூடிய பிரதிநிதிகள் அத்தனைபேரும் மக்களைத் தேடி வந்தார்கள். குறைகளை கேட்டார்கள். பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள். இது தி.மு.க.
ஆனால், மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று பதுங்கியவர்தான் நம்முடைய பழனிசாமி. அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் வரமாட்டார். ஏதோ கனவு கண்டிருக்கிறார். அதற்காக ஜோசியம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.
திமுகவை பொறுத்தவரைக்கும், கூட்டணி என்று சொன்னால், அது கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல, மக்கள் கூட்டணியாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. கனவு காணவேண்டாம். உறுதியாக சொல்கிறேன். 2026 மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகம் இருக்க வேண்டியதில்லை." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications