“எங்களது கட்சி பதவிகளை பறிக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் இல்லை”.. சி.வி.சண்முகம் பதிலடி!
சென்னை: "எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கடந்த 4 ஆண்டுகளாக செய்த ஒரே வேலை கட்சியில் இருந்து நீக்குவதுதன். எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வந்ததில் இருந்தே தொடர் தோல்வி தான்" என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கடைசி நிமிடம் வரை தவெக தயாராக இருந்ததாகவும், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்கு எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளே காரணம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை நீக்கி, 17 மாவட்டங்களுக்கான புதிய செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான அணியினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வீடுதேடி வந்த தலைவர்களை நீங்கள் தேவையில்லை, நான் வெற்றி பெறுவேன். 210 தொகுதிகளில் வெற்றி பெறுவேன் என்று சொல்லி, கூட்டணிக்கு வந்த தலைவர்களை விரட்டியடித்த தலைமையை இன்று நாம் பெற்றுள்ளோம்.
அவர்களையெல்லாம் நாம் அரவணைத்து இருந்தால் நாம் வெற்றி பெற்று இருக்கலாம். அதிமுகவுடன் தவெக கூட்டணியமைக்க தயாராக இருந்தபோதும், நாங்களும் கூட்டணி அமைக்கலாம், மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்று கூறியபோது, எல்லாம் எனக்குத் தெரியும், நான் பார்த்துக் கொள்கிறேன், அவர்கள் வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடுக்கப்பட்ட முடிவு. மக்களவைத் தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவு எடுத்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தை இன்று வரை சொல்லவில்லை.
யாரையெல்லாம் கட்சியில் இருந்து இபிஎஸ் நீக்கினாரோ அவர்கள் அனைவரும் எம்.எல்.ஏ ஆகிவிட்டனர். தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கொடுக்காததால், அவர்கள் கூட்டணியில் இருந்து விலகினார்கள்" என்றார்.
மேலும் பேசிய சி.வி.சண்முகம், "எங்களை நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லை. ஒற்றைத் தலைமையை நாங்கள்தான் கோரினோம். அதற்கான பலனை இன்று அனுபவிக்கிறோம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி செய்யும் ஒரே வேலை கட்சியில் இருந்து நீக்குவதுதன். எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வந்தததில் இருந்து தொடர் தோல்விதான். அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடியே காரணம், நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் எடப்பாடி பழனிசாமி.
என்றைக்கு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தோமோ அன்றைக்கே அதிமுக குடும்ப அரசியலுக்கு சென்று விட்டது. தோல்விக்குப் பொறுப்பேற்பவரே உண்மையான தலைவர். அதிமுக பல தேர்தல்களில் தோற்றாலும் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. வெற்றி பெற்றால் தன்னால் தான் என்பதும் தோற்றால் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கைகாட்டுபவரும் நல்ல தலைவர் அல்ல. எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிவிட்டது" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications