சட்டமன்றத்தில் பேசியதற்கு இபிஎஸ் தரப்பு எதிர்ப்பு..வந்து விழுந்த கேள்வி-ஒரு வரியில் பதிலளித்த ஓபிஎஸ்
சென்னை: சட்டசபையில் ஓ பன்னீர் செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வம், சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டபேரவைத் தலைவர் சொல்வதுதான் அங்கு பதிவு செய்யப்படும். மற்றவை பதிவு செய்யப்படாது என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்து விட்டு சென்றார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா இன்று தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் இந்த மசோதாவை முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார்.இதனையடுத்து ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.

மாநில அரசுக்கு உரிமை உண்டு
இதன்பிறகு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சட்ட ஒழுங்கை பேணுவதும், மக்களை பாதுகாப்பதும், மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை. மாநில எல்லைக்குள்ள மக்கள் அனைவரையும் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும்" என்று கூறினார்.

ஓ பன்னீர் செல்வம் பேச்சு
முதல்வர் பேசியதற்கு பிறகு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினர். பின்னர் இந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அதிமுக சார்பாக தளவாய் சுந்தரம் இந்த மசோதா குறித்து பேசினர். அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் பேசினார். ஓ பன்னீர் செல்வம் பேசி முடிக்கும் போது அதிமுக சார்பாக இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினர்.

சபாநாயகர் அப்பாவு விளக்கம்
இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓ பன்னீர் செல்வத்திற்கு வாய்ப்பு வழங்கியதாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். எனினும், அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சபாநாயகரை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவை தலைவர் சொல்வதுதான்
இந்த நிலையில், ஓ பன்னீர் செல்வத்திடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "உங்களை பேசக்கூடாது என்று சொல்ல அவர்களுக்கு(இபிஎஸ் தரப்பு) உரிமை உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதலளித்த ஓ பன்னீர் செல்வம், " சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டப்பேரவை தலைவர் சொல்வதுதான் அங்கு பதிவு செய்யப்படும். மற்றவை பதிவு செய்யப்படாது" என்றார்.












Click it and Unblock the Notifications