ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது - இபிஎஸ், ஓபிஎஸ், மு.க ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
சென்னை: தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து கூறியுள்ளனர். தங்களது நடிப்பு திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் என ரஜினிக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகில் மிக உயரிய விருதானா தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
திரைப்படத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கடந்த 1969-ம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவித்தார்.
அமிதாபச்சன் ,வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர் ,கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோருக்கு ஏற்கனவே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தாதா சாகேப் பால்கே விருது பெறும் 3வது கலைஞர் ரஜினிகாந்த் ஆவார். இதற்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு நடிகர் சிவாஜிக்கும் 2010ம் ஆண்டு கே பாலச்சந்தர் அவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு அங்கீகாரம்
தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். தங்களது நடிப்பு திறமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் என ரஜினிக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பல விருதுகளை ரஜினி பெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்
திரையுலகில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக, இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்புச் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தன்னிகரற்ற கலைஞன் ரஜினி
இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது! நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள் என்றும் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விருதுக்கு மகிழ்ச்சி
இந்தியாவில் திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விருது பெற்ற இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

ரஜினிக்கு பெருமை
தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்

ரஜினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
திரைத்துறையினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான "தாதா சாகேப் பால்கே" விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகிற்கு மிகச் சிறந்த பங்களிப்பை ரஜினிகாந்த் வழங்கி வருவதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.