“என் மகனை அதிமுக நிகழ்ச்சிகள் எதிலாவது பார்த்து இருக்கீங்களா?” எடப்பாடி கொடுத்த ரிப்ளை!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாக விமர்சித்திருந்த நிலையில், அதுகுறித்து பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, "வேறு குற்றச்சாட்டு இல்லாததால் இப்படிச் சொல்கிறார். என் மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியை குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை திமுக விமர்சிக்கிறது என்றார்.

தவெக தலைவர் விஜய் "திமுக vs தவெக இடையேதான் போட்டி" என்று கூறியது தொண்டர்களை உற்சாகப்படுத்தவே என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி. மேலும், செங்கோட்டையன் பாஜகவில் யாரைச் சந்தித்தார், 6 பேர் சென்றதாகக் கூறிய அந்த 6 பேர் யார் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை இணைக்கச் சொன்னது பாஜகதான் என்ற செங்கோட்டையன் பேசியது குறித்து "அது முடிந்து போன கதை. வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார். அதிமுக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், "2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே "எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை, முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்" என்று அறிவித்துவிட்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கோவையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள், மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. காவல்துறை மீது குற்றவாளிகளுக்கு பயமே இல்லை. இப்போது அரசாங்கம் இருக்கிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.
நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஒரு மாணவனும், மாணவியும் பேசிக்கொண்டிருந்தபோது, மாணவனை அனுப்பிவிட்டு, மாணவியை காவல்துறையினரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். திருவண்ணாமலையிலும் காவல்துறையினரே பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
திமுக ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதற்கு ரூ.104 கோடி நிவாரணம் கொடுத்ததாகவும் திமுகவின் சமூக நலத்துறை அமைச்சரே பேசியுள்ளார். ஒரு திறமையற்ற, பொம்மை முதல்வரிடம் காவல்துறை இருப்பதால், இப்படியான பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன.
50 மாத திமுக ஆட்சியில் 6,400 கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளதால், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இவ்வளவு கொடுமைகளுக்கு இடையிலும் இதுவரை தமிழக அரசு நிரந்தர டிஜிபியை நியமிக்கவில்லை. தங்களுக்கு வேண்டியப்பட்டவரை டிஜிபியாக்க முயற்சி செய்கிறார்கள்.
21 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு 8 முறை இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், வீடு மாறி சென்றவர்கள் பெயர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது. இதுபோல உள்ளவர்களை நீக்கி, தகுதியானவர்களை இடம்பெற செய்வதே எஸ்ஐஆர்.
ஆனால், திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் SIR என்றாலே அலறுகிறார்கள். காலக்கெடு போதாது என்கிறார்கள். இதற்காக பிஎல்ஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, எனவே இதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை. இறந்தவர்கள், வீடு மாறி சென்றவர்களை நீக்கக்கூடாது என திமுகவினர் சொல்கின்றனர். ஏனெனில் தகுதியானவர்கள் மட்டும் இடம்பெற்றால் கள்ள ஓட்டு போடமுடியாது என திமுகவினர் இதனை எதிர்க்கிறார்கள்.
சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்துக்கொடுத்தார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எஸ்ஐஆரை ஆதரிக்கிறோம்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications