அப்போ கூலி.. இப்போ பைசன்! முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய முதல்வர்! எடப்பாடி அட்டாக்!
சென்னை: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரமை நேரில் அழைத்து பாராட்டினர். இந்நிலையில், மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை பிடிக்க வேண்டியமுதல்வரின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்கிற காளமாடன் திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவருமான ஸ்டாலின் ஆகியோர் பார்த்துள்ளனர்.
தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் ஆகியவரை பாராட்டி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

மாரி செல்வராஜ்
அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். ஒவ்வொன்றும் ஒரு 'sharp message'-ஐயும் தாக்கத்தையும் நம் மனங்களில் பதிக்கத் தவறியதே இல்லை. சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக 'பைசன்' மிளிர்கிறது. இத்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, மாரியின் திரைக்கதைக்கு உயிரூட்டியுள்ள துருவ் விக்ரம், பசுபதி, அனுபமா, ரஜிஷா உள்ளிட்ட நடிகர்கள், பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! " என கூறியுள்ளார்.
ஸ்டாலின் விமர்சனம்
இந்நிலையில், இந்நிலையில், மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை பிடிக்க வேண்டியமுதல்வரின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர்
ஸ்டாலின்-ன் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி
திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை, ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது, #ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?
விவசாயிகள் துயரம்
ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது. தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்? தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்? அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.
மழை பாதிப்பு
இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா? அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான். விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications