ரவுடி சாம்ராஜ்ஜியமாக மாறிவிட்ட சென்னை! பல்லவன் சாலையில் அதிர்ச்சி! எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு
சென்னை: சென்னை பல்லவன் சாலையில் இருவர் கத்திகளுடன் மோதிக் கொண்ட சம்பவத்தை பார்த்தால் திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்ஜியமாக மாறிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே இரு ரவுடிக் கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதாகவும், சென்ட்ரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது.
காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?
தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது.
ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத "ஸ்டாலின் அரசின் சாதனை" என்று இந்த பொம்மை முதலமைச்சர் விளம்பரம் செய்துக் கொள்ளலாம்.
தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்
என குறிப்பிட்டுள்ளார்.
இது போல் அவர் மற்றொரு ட்வீட்டில் கூறியிருப்பதாவது: திருச்சி பீமநகரில் கொலையாளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு, காவலர் குடியிருப்பில் எஸ்.எஸ்.ஐ. வீட்டில் தஞ்சம் புகுந்த தாமரைச்செல்வன் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதிலாக இருக்கின்றன.
காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பு இல்லாமல் போனதை எப்படி விளக்குவார் இன்றைய பொம்மை முதல்வர்?
காவலர் குடியிருப்பில் புகுந்து வெட்டும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது கிஞ்சற்றும் பயம் இல்லாமல் போனதற்கு காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் திரு.
@mkstalin வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மேடைதோறும் என்னைப் பற்றி அவதூறு பேசுவதிலும், இல்லாத விஷயத்தை வைத்து அரசியல் செய்வதிலும் இருக்கும் முனைப்பு, ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் ஒருநாளாவது மக்களைக் காப்பதில், சட்டம் ஒழுங்கை சீர்செய்வதில் இருந்ததுண்டா இந்த பொம்மை முதலமைச்சருக்கு?
காவலர் குடியிருப்பில் புகுந்து கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென Failure மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications