EPS: எடப்பாடி பழனிசாமி வீட்டை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள்! முகமெல்லாம் பூரிப்பு! தினகரன் Effect-ஆ?
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு அதிமுக எம்எல்ஏக்கள் அழைக்கப்பட்ட நிலையில் நல்ல முடிவை தலைவர் அறிவிப்பார் என லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் தெரிவித்துள்ளார். அந்த முடிவு என்ன என்பது குறித்து ஆவல் எழுந்துள்ளது.
புதுவை ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் சென்னைக்கு புறப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் தங்கியிருந்த அமமுக எம்எல்ஏ காமராஜ்தான் காணவில்லை என பரபரப்பு எழுந்தது.

இந்த நிலையில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த லீமா ரோஸிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, நல்ல முடிவை தலைவர் எடப்பாடியார் அறிவிப்பார். எம்எல்ஏக்களை எல்லாம் அவரது வீட்டிற்கு வர சொல்லியிருக்கிறார், அதற்காக நாங்கள் செல்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு லீமா ரோஸ் பேசுகையில், "தவெக- அதிமுக இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் எடப்பாடியார் முதல்வராவார்" என தெரிவித்திருந்தார். அதன் பிறகு நேற்றைய தினம் தம்பிதுரையும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வாராவார், சில ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லாவற்றையும் வெளியே சொல்ல முடியாது" என்றார்.
அது போல் மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை காணவில்லை என்றும் போலி கையெழுத்தை விஜய் கொடுத்ததாகவும் ஆளுநரிடம் புகார் தெரிவிக்க வந்த தினகரன், எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு காமராஜ் ஆதரவு கடிதம் கொடுத்துள்ளார் என்றார். எனவே என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை வழங்காத நிலையில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
தவெக-வின் பலம்: 116-இல் நிற்பது ஏன்?
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் வீழ்த்தி, 108 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சாதனை படைத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை (118 இடங்கள்) கிடைக்காததால், மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது.
ஆதரவு அளிக்கும் கட்சிகள்: காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2).
தற்போதைய பலம்: கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து தவெக-வின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.
தேவைப்படும் இடங்கள்: மேஜிக் நம்பரான 118-ஐ எட்ட இன்னும் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தவெக-வுக்குத் தேவைப்படுகிறது.
புதுச்சேரியில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் முகாம்: தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் சாய்ந்துவிடக் கூடாது என்பதில் அதிமுக தீவிரமாக உள்ளது. இதனால், கடந்த 6-ஆம் தேதி இரவு முதல் 40-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி, புதுக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வருகை: எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு விரைந்த அவர், விடுதியில் உள்ள எம்.எல்.ஏ-க்களுடன் சுமார் ஒரு மணி நேரம் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
கட்சித் தாவலைத் தடுப்பது மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு இடங்களே தேவைப்படுவதால், தவெக-வின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? அதிமுக தனது எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துக் கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பால் தமிழக அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications