எடப்பாடி பழனிசாமியை தனிமைப்படுத்த! செங்கோட்டையனுக்கு அமித்ஷா அசைன்மென்ட்! வன்னியரசு வார்னிங்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்தப்படுவார் என விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வன்னியரசு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர்
நடிகர் விஜய் தலைமையில்
தவெகவில் இணைவதற்கு பின்னால் பாஜக தான் இருக்க வேண்டும்.
ஏனென்றால், அதிமுகவிலிருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டவுடனே டெல்லிக்கு பறந்து அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன். "அமித்ஷாவை சந்தித்து அடுத்து என்ன செய்யலாம்"
என ஆலோசனை கேட்கத்தான் வந்ததாக வெளிப்படையாக சொன்னார்.
இப்போது, தவெகவில் இணைவதும்
அமித்ஷாவின் ஆலோசனை தானா என்னும் அய்யம் எழுகிறது. எடப்பாடி பழனிச்சாமியை தடுமாற வைத்து,
பாதிக்கு பாதி தொகுதிகளை பெறுவது தான் பாஜகவின் உத்தி.
(பீகார் போல) ஒரு பக்கம் நடிகர் விஜய் மூலம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்துவதும்
மறுபக்கம் அதிமுகவையே பலவீனப்படுத்துவதும் தான் பாஜகவின் சதி உத்தி.
தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள்ளேயே
தனிமைப்படுத்தப்படுவார்.
அதற்கு பின் பாஜக முழுமையாக
அதிமுகவை கையகப்படுத்தும்.
அதற்கான உத்திகளை பாஜக தொடங்கி விட்டது.
நடிகர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா
தலைமையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு
நடிகர் விஜய்யை ஏற்றுக் கொள்வதில் எந்த மனத்தடையும் இருக்காது என்பதையே செங்கோட்டையன்
தவெகவில் இணைவதை காட்டுகிறது. இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்றைய தினம் தனது ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோருடன் தவெகவில் இணைந்தார். அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் பணியும் வழங்கப்பட்டது.
தவெகவில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: நான் தவெகவில் இணைந்ததற்கு காரணம் இருக்கிறது. திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுதான். இரண்டும் ஒன்றாகவே பயணிக்கின்றன. அதனால்தான் தவெகவில் இணைந்தேன். தூய்மையான ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதற்காக நான் தவெகவில் இணைந்தேன். தவெகவிற்காக வெற்றியை தர மக்கள் காத்திருக்கிறார்கள். 2026 ஆல் மக்கள் புரட்சி ஏற்படும். இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுகவிற்காக அர்ப்பணித்துக் கொண்டவர் என ஜெயலலிதாவே என்னை பாராட்டினார். ஜெயலலிதா மறைந்த போதும் அதிமுக பிரிந்தது. நான் என்று ஒருவர் நினைத்தால் ஆண்டவன் தான் என்று கண்டித்து விடுவார். இறைவன் இருக்கிறார். நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்றும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications