பெரிய ட்விஸ்ட்.. ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றது எதற்காக தெரியுமா! மருது அழகுராஜ் சொன்ன முக்கிய தகவல்
ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் பின்வாங்கக் காரணத்தை மருது அழகுராஜ் விளக்கியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓபிஎஸ் இந்த முடிவை ஏன் எடுத்தார் என்பது குறித்து மருது அழகுராஜ் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை அடுத்து அங்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்..
அதேபோல அமமுக, நாம் தமிழர் உள்ளிட்டோரும் இந்தத் தேர்தலில் களமிறங்குகின்றனர். கடந்த ஜன. 31ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
பாஜகவிற்கு 'இன்டிகேட்டர்' போட்டு, திமுகவிற்கு 'கையை காட்டி..' ஆஹா.. ஓபிஎஸ் ரூட்டை கவனித்தீர்களா!
ஈரோடு கிழக்கு
இருப்பினும், அதிமுகவில் தொடக்கம் முதலே குழப்பம் இருந்து வந்தது. அதிமுக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து இருந்தது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி தரப்பில் தென்னரசு இந்தத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல ஓபிஎஸ் சார்பிலும் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இப்படி இரு தரப்பும் அதிமுக வேட்பாளர்கள் என்று இருவரை அறிவித்தால் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.
வாபஸ்
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க டெல்லி சென்றுள்ளார் அவை தலைவர் தமிழ்மகன் உசேன்.. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், ஈரோடு கிழக்குத் தொகுதியிலிருந்து ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
விமர்சனம்
மேலும், அதிமுக சார்பில் இரட்டை இலையில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்போம் என்றும் அவர் அறிவித்தார். ஓபிஎஸ் அச்சத்தில் பின்வாங்கிவிட்டார்கள் என்று எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர்.. ஓபிஎஸ் பெருந்தன்மையுடன் செயல்படுவதாக இருந்தால் நீதிமன்றத்தை நாடியிருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர் செம்மலை, வேட்பாளரைத் திரும்பப் பெறுவது காலம் கடந்த அறிவிப்பு என்றும் வேறு வழியில்லாமல் இந்த முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.
மருது அழகுராஜ்
இந்தச் சூழில்ல ஓபிஎஸ் இந்த முடிவை ஏன் எடுத்தார் என்பதை ஓபிஎஸ் ஆதரவு செய்தித்தொடர்பாளர் மருது அழகுராஜ் விளக்கியுள்ளார். இது தொடர்பாகச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஓபிஎஸ் பின்வாங்கியதாக அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்.. எங்களை அதிமுகவில் இருந்து அழித்துவிட வேண்டும் என்பவரின் கருத்து அப்படி தான் இருக்கும். தன்னால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படக் கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்தார்.
பெருந்தன்மை
இரட்டை இலைக்கு எதிராகப் போட்டியிடக் கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருந்தார்.. தன்னலத்தை விடக் கட்சியின் நலனை பெரியதாக அவர் கருதுகிறார். அரசியலை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று நினைப்பவர் எடப்பாடி பழனிசாமி.. அவருக்கு ஈரோடு மக்கள் நிச்சயம் நல்ல பாடம் புகட்டுவார்கள்.. இதை எல்லாம் தொண்டர்களும் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
என்ன காரணம்
இப்போது ஈரோடு கிழக்கு என்ற ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் மட்டுமே நடக்கிறது. மீதமுள்ள 233 தொகுதிகளில் தேர்தல் இல்லை.. மக்கள் இதற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் இதில் ஓபிஎஸ் பெருந்தன்மை அனைவரையும் விட முக்கியமானது. என்னால் சின்னம் முடக்கப்பட்டது என்ற அவச்சொல்லுக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அந்த அடிப்படையில் கட்சியின் நலன் கருதியும் தொண்டர்கள் ஒற்றுமை கருதியும் ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பதிலடி தருவோம்
இதைப் பின்வாங்கினார்கள் என்று சொன்னால் சொல்லட்டும். நாங்கள் பெருந்தன்மை காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளோம். தண்ணீரில் எறும்பு இருக்கும் போது, எறும்புகளை மீன் தின்றும். அதேநேரம் நீர் வற்றிவிட்டால்.. அதே மீனை எறும்புகள் தின்றும். இதேபோல காட்சிகள் மாறும்.. எங்களுக்கான காலம் வரும் அப்போது அனைத்திற்கும் பதிலடி தருவோம்" என்று அவர் தெரிவித்தார்.