டெல்லியின் 'Code Red'.. ஒரே நாளில் டோட்டலா ஆஃப்.. “திரும்ப மோத வேண்டாம்”.. முடிவை மாற்றிய ஓபிஎஸ்!
பாஜக அறிவுறுத்தலின்படி, ‘ஃபேஸ் சேவிங்’ முயற்சியாகவே கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையத்தை நாடும் முடிவை ஓபிஎஸ் கைவிட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : முதல் நாளில், நாங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிடப் போகிறோம் எனச் சொன்ன ஓபிஎஸ் தரப்பு அடுத்த நாளே, தங்கள் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற்று, இரட்டை இலைக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்ததன் பின்னணியில் அண்ணாமலையின் பேச்சும், டெல்லி பாஜக தலைமையின் கையும் இருக்கின்றன என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.
அதிமுக வேட்பாளராக தென்னரசு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட படிவங்களை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான ஏ, பி படிவங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு கையெழுத்திட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஓபிஎஸ் தரப்பு தாங்கள் மீண்டும் தேர்தல் ஆணையத்தை நாடப் போவதாகச் சொன்னது. ஆனால், அந்த முடிவைக் கைவிட்டு நேற்று தங்கள் தரப்பு வேட்பாளரின் மனுவை வாபஸ் பெற்றது ஓபிஎஸ் அணி.

இடைத்தேர்தல் வேட்பாளர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமாகாவை விலக வைத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிட ரெடியானதுமே, தங்கள் அணியும் போட்டியிடுவதாக அறிவித்தார் ஓபிஎஸ். பின்னர், ஈபிஎஸ் அணி வேட்பாளரை அறிவித்த சில மணி நேரங்களில் தனது அணியின் வேட்பாளரை அறிவித்தார் ஓபிஎஸ். அப்போதும் கூட, பாஜக போட்டியிட விரும்பினால், தங்கள் வேட்பாளரை திரும்பப் பெறுவோம் எனத் தெரிவித்தார். பாஜகவை போட்டியிட வைத்துவிட்டு, தான் விலகிக்கொள்ள வேண்டும் என்பதே ஓபிஎஸ்ஸின் விருப்பமாக இருந்தது. ஆனால், பாஜக இதில் தலைகொடுக்க விரும்பாமல் தவிர்த்தது.

ஓபிஎஸ் தரப்பு
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு முன்னதாகவே, வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார் ஓபிஎஸ் அணியின் வேட்பாளர் செந்தில் முருகன். அதன்பிறகு, உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தில் ஒற்றுமையாக களமிறங்க ரெடி என அறிவித்திருந்தார் ஓபிஎஸ். பின்னர், அவைத்தலைவர் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாக ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது. தங்கள் அணி வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய படிவத்தில் குறிப்பிடவில்லை என்பதால் தேர்தல் ஆணையத்தை மீண்டும் அணுகப் போவதாகவும் ஓபிஸ் தரப்பு கூறியது.

வாபஸ்
ஆனால், திடீரென ஓபிஎஸ் அணி வேட்பாளர் தனது வேட்பு மனுவை நேற்று வாபஸ் பெற்றார். இரட்டை இலை முடக்கப்படக்கூடாது என்பதற்காகவும், அதிமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் தங்கள் அணி சார்பில் நிறுத்திய வேட்பாளரை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் அணி அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் முடியும் நேரத்தில், மீண்டும் தேர்தல் ஆணையத்திற்குச் சென்று மூக்குடைபடக்கூடாது என்பதற்காகவே, பெருந்தன்மையாக வேட்பாளரை வாபஸ் பெறும் முடிவுக்கு ஓபிஎஸ் அணி இறுதியாக வந்ததாக கூறப்படுகிறது.

அவைத்தலைவர்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் அவைத்தலைவர் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஈபிஎஸ் அறிவித்த வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக கையெழுத்திட்ட படிவங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று சமர்ப்பித்தார்.

5 டாகுமெண்ட்
தேர்தல் ஆணையத்தில் அவைத்தலைவர் கட்டுக்கட்டாக ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவளித்த படிவம், பொதுக்குழு உறுப்பினர்களின் புகைப்படங்கள், அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை நகல்கள், நகலில் சுய சான்றளிப்பு, நோட்டரி பப்ளிக் கையெழுத்து, ஆகியவற்றை மொத்தமாக தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம்
அவைத்தலைவர் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த தேர்தல் ஆணையம், அதிமுக வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதமும் அனுப்பியது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட உள்ளது.

முடிவில் மாற்றம்
முதல் நாளில் அவைத் தலைவர் ஒருதலைப் பட்சமாக நடந்துகொண்டதாக ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டி, தேர்தல் ஆணையத்தை நாடப்போவதாகச் சொன்னது. ஆனால், அவைத் தலைவர், வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டு வாக்கெடுப்பு கோர வேண்டும் என்பது இல்லை, அந்த படிவத்திலேயே, மாற்று வேட்பாளர் பெயரை குறிப்பிடவும் இடம் அளிக்கப்பட்டுள்ளது, இதனால், ஓபிஎஸ் தரப்பின் இந்த வாதத்தை தேர்தல் ஆணையம் ஏற்காது என ஓபிஎஸ்ஸுக்கு சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்தே, ஓபிஎஸ் அந்த முடிவைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரே நாளில் சேஞ்ச்
மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வலுவான வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும், இரட்டை இலை சின்னத்தில் நிற்க ஆதரவளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ்ஸிடம் கேட்டுக்கொண்டதாக முன்னதாக தெரிவித்திருந்தார். அதேபோல, டெல்லி தலைமையிடம் இருந்தும், ஓபிஎஸ்ஸுக்கு சில அறிவுறுத்தல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவளியுங்கள் என சிக்னல் தரப்பட்டுள்ளது. அதையொட்டியே ஒரே நாளில் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கி வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளது ஓபிஎஸ் தரப்பு.












Click it and Unblock the Notifications