ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- முதியோர், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குப் பதிவு நாளை தொடக்கம்!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் மூலமாக வாக்களிப்பது நாளை முதல் தொடங்க உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 256 முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தி உள்ளனர். இவர்களில் 13 பேர் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள்; 33 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். கர்நாடகா மாநில பெண் பத்மாவதி சுயேட்சையாக தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது சர்ச்சையானது. இதனையடுத்து தேர்தல் அதிகாரி மணீஷ் இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நாளை முதல் தபால் வாக்களிக்க உள்ளனர். வரும் 27-ந் தேதி வரை தபால் வாக்களிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் மூலம் வாக்களிக்க உள்ளனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகள் பதிவு செய்யப்படும்.
வாக்குச் சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அடையாளங்கள் சரிபார்க்கப்பட்டு படிவங்கள் வழங்கப்படும்; அந்தப் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு கையெழுத்து/ கைரேகை பெறப்படும். பின்னர் ரகசியமாக வாக்குச் சீட்டில் வாக்குச் செலுத்த அனுமதிக்கப்படுவர். உடல்நிலை பாதிக்கப்பட்டு வாக்களிக்க இயலாதவர் எனில் அவரது சார்பில் கட்சி சார்பற்ற ஒரு பிரதிநிதி வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். இத்தகைய குழு வீடுகளுக்கு வரும் போது மாற்றுத் திறனாளிகள் தரப்பில் உரிய அரசு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications