ஈரோடு கிழக்கு தேர்தல்: ஓபிஎஸ் பிரசாரத்திற்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? இபிஎஸ் தரப்பு பதிலை பாருங்க!
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை சுமார் 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமாக நடத்தினார் என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை சுமார் 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமாக நடத்தினார். ஓபிஎஸ் துணையோடுதான் ஆட்சி நடைபெற்றது. அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை என்று ஈபிஎஸ் ஆதரவாளர் வைகைச்செல்வன் கூறினார். மேலும் ஓபிஎஸ் பிரசாரத்திற்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கும் வைகைச்செல்வன் பதில் அளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்தன. இதனால், அக்கட்சிக்கு இரட்டைஇலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய உத்தரவிட்டது.

ஒப்புதல் படிவம்
பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்பாளரை தேர்வு செய்து அவைத்தலைவர் தமிழ் மகன் உசைனிடம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தேர்தல் ஆணையத்திற்கு சமர்பிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் படிவம் அனுப்பி வைக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார்.

எடப்பாடியின் முகவராக செயல்படுவதாக
முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், ஈரோடு கிழக்குத் தொகுதியிலிருந்து ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகனின் பெயர் வேட்பாளர் தேர்வு படிவத்தில் இல்லை. தமிழ்மகன் உசேன் எடப்பாடி பழனிசாமியின் முகவராக செயல்படுவதாகவும் ஓபிஎஸ் தரப்பு கடுமையாக விமர்சித்து இருந்த நிலையிலும் வேட்பாளரை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது.

மறுப்பதற்கு எதுவும் இல்லை
இரட்டை இலையை வெற்றிப் பெற வைக்க வேண்டும் என்பதற்காக செந்தில் முருகன் விலகுகிறார். தென்னரசுக்காக நாங்கள் விலகவில்லை. இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென பொதுமக்களிடம் கேட்க உள்ளோம் என்றும் ஓபிஎஸ் தரப்பு கூறியது. இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை சுமார் 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமாக நடத்தினார். ஓபிஎஸ் துணையோடுதான் ஆட்சி நடைபெற்றது. அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை என்று ஈபிஎஸ் ஆதரவாளர் வைகைச்செல்வன் கூறினார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஓபிஎஸ் துணையோடுதான் ஆட்சி நடந்தது
ஓபிஎஸ் தரப்பினருக்கு வேறு வழியில்லை. அதிமுகவின் வலிமை மிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை சுமார் 4 ஆண்டுகள் நடத்தினார். ஓபிஎஸ் துணையோடுதான் ஆட்சி நடைபெற்றது. அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை. எங்கள் அண்ணகாக இருந்தவர்தான். அதில் மாற்று கருத்து எதுவும் கிடையாது . அண்ணன் தம்பிக்கு இடையே சில பிரிவுகள் வரலாம்.. பிரச்சினைகள் வரலாம். இருந்தாலும் அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்று ஒரே அஜெண்டா எங்களுக்கு இருக்கிறது. இந்த அஜெண்டாவை நிறைவேற்றுவதற்கு ஒரு தலைமை வேண்டும்.

ஓபிஎஸ் ஆதரவை பெறுவது குறித்து
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெறுவதற்கு யாரெல்லாம் துணை வேண்டுமோ அவர்களை எல்லாம் அரவணைத்து செல்கிறோம். தென்னரசு அவர்களை அதிமுக வேட்பாளராக எடப்பாடி நிற்க வைத்து இருக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைவரும் ஒருமுகத்துடன் பணியாற்றி கொண்டு இருக்கிறோம். ஓபிஎஸ் ஆதரவை பெறுவது குறித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் மற்றும் மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications