வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
சென்னை: ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்நிலையில் தான் வாரிசு அரசியலால் கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு ஸ்டாலினும், வைகோவும் பதில் சொல்ல வேண்டும் எனக்கூறி தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பரபரப்பை கிளப்பி உள்ளார்.
ஈரோடு எம்பியாக இருந்தவர் கணேச மூர்த்தி. இவருக்கு வயது 77. மதிமுகவை சேர்ந்தவர். வைகோவுக்கு மிகவும் நெருக்கமானவர். இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலி்ல் திமுக கூட்டணியில் மீண்டும் ஈரோடு தொகுதியில் போட்டியிட விரும்பினார்.

ஆனால் திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கணேச மூர்த்தி மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 24ம் தேதி காலையில் கணேச மூர்த்தி ஈரோட்டில் உள்ள தனது இல்லத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஷமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து டாக்டர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் கணேசமூர்த்தி உயிரிழந்தார். மருத்துவ சிகிச்சையில் இருந்த அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தென்சென்னையில் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜனிடம் மதிமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ஈரோடு மதிமுக எம்பி இறந்தது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல், ஜனநாயகத்தை படுகொலை செய்துவிடும் என பிரதமர் சொல்லியுள்ளார். தற்போது நன்றாக பணியாற்றி கொண்டிருந்த மதிமுக எம்பியை வாரிசு அரசியல் படுகொலை செய்துள்ளது. குடும்பஆசை, வாரிசு ஆசை. இதற்கு வைகோ, ஸ்டாலினை நான் குற்றம்சாட்டுவேன். ஏனென்றால் அனுபவமிக்க ஒருவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
மேலும் இந்த வைகோ எதற்காக திமுகவில் இருந்து வெளியே வந்தார். கருணாநிதி தனது மகன் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறி வெளியே வந்துவிட்டு இப்போது வைகோ தனது மகனுக்கு சீட் கொடுத்துள்ளார். இதனால் அனுபவமிக்க நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம்.
நீட் தேர்வில் ஒரு தவறு நடந்தவுடன் உலகம் முழுவதும் அதனை வைத்து பிரபலப்படுத்தினர். ஆனால் இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்திருப்பது என்பது தமிழகத்தில் தான் நடந்துள்ளது. மிகுந்த வேதனையாக இருக்கிறது. இதற்கு ஸ்டாலினும், வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது தான் வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கும் அங்கீகாரம் சாதாரண தொண்டனுக்கு கிடைக்கிறதா? ஈரோடு எம்பி தற்கொலை செய்துவிட்டார். ஆனால் திமுகவில் பலரும் வெளியே சொல்ல முடியாமல் உள்ளனர். இதனால் முதலில் அவர்களின் கட்சியில் ஜனநாயகம் வரட்டும். வாரிசு ஒழியட்டும். அதன்பிறகு அவர்கள் எங்களை பற்றி பேசலாம்'' என காட்டமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications