இந்தியா பிரிந்து விடக் கூடாது.. இணைப்பு மொழி ஆங்கிலம்தான்.. திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்
சென்னை: தமிழக சட்டசபையில் இந்தி திணிப்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்று கூட்டணி கட்சிகளான ஈஸ்வரனும், ஜவாஹிருல்லாவும் பேசினர்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று இரண்டாம் நாள் கூடியது. இந்த கூட்டத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, அருணா ஜெகதீசன் அறிக்கை உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டன. அது போல் இந்தி திணிப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை ஆதரித்து கூட்டணி கட்சியினர் சட்டசபையில் பேசினர். அந்த வகையில் சட்டசபையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடக்கிறது.
எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பது மாணவர், பெற்றோர் உரிமை ஆகும். கல்வியை பொதுப் பட்டியலில் கொண்டு சென்றதே இந்தி திணிப்புக்குதான் என்பதை நிரூபிக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவ படிப்பு- அகில இந்திய கோட்டாவில் ம.பி.யில் தமிழக மாணவர் படிக்க முடியாது.
இருமொழி கொள்கைதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணம் என்பதை ஏன் மறுக்கிறார்கள்?: இந்தியா பிரிந்து விடக் கூடாது என்பதற்காக இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார் ஈஸ்வரன். இதைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசினார்.
வார்னிங்கே தரவில்லை.. 17 ரவுண்டு ஒரே ஆளாக சுட்டுத் தள்ளிய சுடலை கண்ணு! பகீர் அருணா ஜெகதீசன் அறிக்கை!
அவர் பேசுகையில் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே தேர்தல் என்கிற போக்கில் பாஜக அரசு போகிறது. கொல்கத்தாவில் இந்தி திணிப்புக்கு எதிராக அண்ணா, கருணாநிதி படங்களுடன் பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர்.
1965-ல் இந்தி ஏகாதிபத்தியத்தை அண்ணா, கருணாநிதி தோற்கடித்தனர் என மேற்கு வங்க போராட்டக்காரர்கள் பெருமிதம். ஆங்கிலமும் மாநில மொழிகளும் இந்தியாவின் இணைப்பு மொழிகளாக இருக்க முடியும் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.