தடுமாறும் ஆவின்! பால் விநியோகம் தட்டுப்பாடு! முதல்வர் தலையிடாமல் வேலைக்கு ஆகாது! ஈஸ்வரன் குட்டு!
ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை விளக்கும் ஈஸ்வரன்.
சென்னை: பால் கொள்முதல் விலையை உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தாமல் ஆவின் பால் விநியோகம் சீர்படாது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்வதால், ஆவின் நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு பால் கொடுப்பதை உற்பத்தியாளர்கள் தவிர்க்கிறார்கள் என காரணம் கூறியுள்ளார்.
ஆவின் தடுமாறி வரும் சூழலில், பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து முதலமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பால் உற்பத்தியாளர்கள்
பால் உற்பத்தியாளர்கள் பாலை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகமாகி இருக்கிறது. மாட்டு தீவனத்தில் இருந்து அனைத்து பொருட்களுக்கும் விலை உயர்ந்திருக்கிறது. பால் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான வருமானமும் காலத்திற்கு ஏற்ப மாறவில்லை. அதனால் விலை அதிகம் கொடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் சமீப காலமாக பாலை விற்பனை செய்கிறார்கள்.

25 லட்சம் லிட்டர்
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்திற்கு குறைந்த விலைக்கு கொடுப்பதை தவிர்க்கிறார்கள். தினசரி 38 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது 25 லட்சம் லிட்டர் ஆக குறைந்திருக்கிறது. அதனால் ஆவின் நிறுவனம் சில நாட்களாக மாநிலத்தின் பல இடங்களில் பால் விநியோகம் செய்ய முடியாமல் தடுமாறுகிறது.

ஆவின் நிறுவனம்
தற்போது தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற விலையை விட லிட்டருக்கு 10 ரூபாய் வரை தனியார் நிறுவனங்கள் அதிகமாக கொடுக்கின்றனர். ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற விலையை விட உற்பத்தி செலவு மிகவும் அதிகமாக இருக்கின்றது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுப்பதன் மூலமாகத்தான் ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை அதிகப்படுத்த முடியும்.

கொள்முதல் விலை
வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவு போடுவதன் மூலமாக உற்பத்தியாளர்களை வெளியில் விற்பதை தடுக்க முடியாது. தாமதப்படுத்தாமல் உடனடியாக பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை அழைத்து அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி உற்பத்தியாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications